பிரதீபாவின் உடல் பெற்றோரிடம் ஒப்படைப்பு.. போலீஸ் பாதுகாப்புடன் சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்படுகிறது
தற்கொலை செய்து கொண்ட பிரதீபாவின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
Recommended Video
விழுப்புரம்: தற்கொலை செய்து கொண்ட பிரதீபாவின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
நீட் தேர்வில் தோல்வியுற்றதால் விழுப்புரத்தைச் சேர்ந்த மாணவி பிரதீபா நேற்று இரவு விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டார். கூலித் தொழிலாளியின் மகளான பிரதீபா 12-ம் வகுப்பில் 1,125 மதிப்பெண்கள் எடுத்துள்ளார்.
கடந்த ஆண்டு நீட் தேர்வில் வெற்றி பெற்றும் அரசு கல்லூரியில் இடம் கிடைக்காத சூழலால், இந்த ஆண்டு மீண்டும் நீட் எழுதிய பிரதீபா அதில் தோல்வியுற்றதால் தற்கொலை செய்து கொண்டார்.
உடல் ஒப்படைப்பு
இந்நிலையில் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் பிரதீபாவின் உடலுக்கு உடற்கூறாய்வு செய்யப்பட்டது. உடற்கூறாய்வு முடிந்த நிலையில் பிரதீபாவின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
குடும்பத்தினர் நிபந்தனை
முன்னதாக பிரதீபாவின் குடும்பத்தினர் உடலை பெற 3 நிபந்தனைகளை விதித்திருந்தனர். அதாவது உயிரிழந்த பிரதீபாவின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும், மாணவி பிரதீபாவின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி வழங்க வேண்டும், நீட் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட 3 நிபந்தனைகளை விதித்தனர்.
ஆட்சியர் பேச்சு
கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை உடலை வாங்க முடியாது என அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் பிரதீபாவின் பெற்றோரிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் நிபந்தனைகள் குறித்து அரசுக்கு பரிந்துரை செய்வதாக உறுதியளித்தார்.
பெற்றுக்கொண்ட பெற்றோர்
மேலும் அவர்களின் நிபந்தனைகளை கோரிக்கை மனுவாக ஆட்சியர் பெற்றுக்கொண்டார். கோரிக்கை மனுவை ஆட்சியர் பெற்றுக்கொண்டதை தொடர்ந்து பிரதீபாவின் உடலை அவரது பெற்றோர் பெற்றுக்கொண்டனர்.
பலத்த போலீஸ் பாதுகாப்பு
இதையடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பிரதீபாவின் உடல் அவரது சொந்த ஊரான பெருவளூர் கிராமத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.