“திருமணத்திற்கு முன் ஆண்மைப் பரிசோதனை கட்டாயம் இல்லை”- மத்திய அரசு பதில்!
மதுரை: திருமணத்திற்கு முன்னர் ஆண்மைப் பரிசோதனையைக் கட்டாயப் படுத்த முடியாது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
போடியைச் சேர்ந்த ஒருவருக்கும், திருச்சியைச் சேர்ந்த ஒரு பட்டதாரி பெண்ணிற்கும் 2013 ஜூன் 19 இல் திருமணம் நடந்தது.
கணவருக்கு ஆண்மைக் குறைபாடு இருந்ததால் அவரால் தாம்பத்திய வாழ்க்கையில் ஈடுபாடு காட்ட முடியவில்லை.
விவாகரத்து வழக்கு:
இதையடுத்து விவாகரத்துக் கோரி திருச்சி கோர்ட்டில் மனைவி மனு செய்தார். வழக்கு நிலுவையில் உள்ளது.
சமூகநலத்துறையில் புகார்:
இந்த நிலையில் குடும்ப வன்முறை தடுப்புச் சட்டத்தின் கீழ் அந்தப் பெண் மாவட்ட சமூகநலத்துறை அலுவலரிடம் புகார் செய்தார். அந்த விசாரணை நடைமுறைகளுக்கு தடைகோரி கணவர் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் மனு செய்தார்.
முக்கிய பிரச்சினை இது:
இதுகுறித்து விசாரணை நடத்திய நீதிபதி, "பல்வேறு விவாகரத்து வழக்குகளில் ஆண்மைக் குறைபாடு, மலட்டுத்தன்மை முக்கிய பிரச்சினையாக உள்ளது.
வழக்கு விசாரணை:
திருமணத்திற்கு முன் மருத்துவப் பரிசோதனை அவசியமா, இல்லையா என மத்திய, மாநில அரசுகள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்" என உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில் இந்த வழக்கு நீதிபதி என்.கிருபாகரன் முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
நிபுணர்களிடம் கருத்துகள்:
அப்போது, மத்திய அரசின் உதவி சொலிசிட்டர் ஜெனரல் ஜி.ஆர்.சாமிநாதன் ஆஜரானார். மத்திய குடும்பநலம் மற்றும் சுகாதாரத்துறை சார்புச் செயலாளர் தாக்கல் செய்த பதில் மனுவில் பல துறை நிபுணர்களிடம் இவ்விவகாரம் பற்றி கருத்துக்கள் கோரப்பட்டது.
தனிமனித உரிமை:
திருமணத்திற்கு முன் ஆண்மைப் பரிசோதனை செய்ய வேண்டும் என கட்டாயப்படுத்த முடியாது. சட்டப்பூர்வமாக்க முடியாது. கட்டாயப்படுத்துவது தனிமனித உரிமை மற்றும் அந்தரங்க விஷயங்களை பாதிக்கும் செயல்.
மருத்துவ பரிசோதனை தேவையில்லை:
பாலுணர்வு என்பது மனிதனிக்கு மனிதன் சூழ்நிலைக்கு சூழ்நிலை வேறுபடும். சில வழக்குகளில் விரிவான மருத்துவப் பரிசோதனை செய்தாலும் சம்பந்தப்பட்ட நபர் ஆண்மைக் குறைபாடு உள்ளவர் என உறுதியாக கூறுவது சாத்தியமற்றது என குறிப்பிடப்பட்டது.
பதில் மனு தாக்கல்:
இதையடுத்து மத்திய அரசு அக்டோபர் 27 இல் விரிவான பதில் மனு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.