"ஆறுமுக"க் கூட்டணிக்கு இனி ஏறுமுகம்தான்.. திருச்செந்தூரிலிருந்து பிரேமலதா
திருச்செந்தூர்: ஆறு தலைவர்களைக் கொண்ட எங்கள் கூட்டணிக்கு இனி ஏறுமுகம்தான் என்றார் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார். திருச்செந்தூர் சூரனை சம்ஹாரம் செய்த இடமாகும். எனவே அதுபோல, எதிரிகளை வீழ்த்திட மக்கள் அனைவரும் தேமுதிக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
திருச்செந்தூர் தொகுதி தேமுதிக வேட்பாளர் செந்தில்குமாரை ஆதரித்து பிரேமலதா ஞாயிற்றுக்கிழமை பிரச்சாரம் செய்தார். அப்போது பேசிய பிரேமலதா, தமிழ்நாட்டில் இதுவரை அமையாத வெற்றிக் கூட்டணியாக நமது கூட்டணி அமைந்துள்ளது என்றார்.
திருச்செந்தூர் தான் சூரசம்ஹாரம் செய்து எதிரிகளை துவம்சம் செய்த தொகுதி. சூரசம்ஹாரம் போல எதிரிகளை வீழ்த்தி இந்த தொகுதியை கைப்பற்றி சாதனை படைக்க வேண்டும்.
பஞ்சபாண்டவர்களாக இருந்த நமது கூட்டணி தற்போது 6 தலைவர்களை கொண்ட ஆறுபடை வீடுபோல ஆறுமுக கூட்டணியாகியுள்ளது.
ஆறுமுகம் என்றாலே ஏறுமுகம் தான். இனி இறங்கு முகம் கிடையாது. இந்த ஏற்றம் இனி தமிழ்நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்தும்.
திமுக சார்பில் இந்த தொகுதியில் போட்டியிடும் அனிதா ராதாகிருஷ்ணன் 3 முறை வெற்றி பெற்றுள்ளார். ஆனால், தொகுதிக்கு ஏதாவது செய்துள்ளாரா என்றால், அது மிகப்பெரிய கேள்விக்குறிதான்.
தூத்துக்குடி- திருச்செந்தூர் சாலை படுமோசமாக உள்ளதை பார்க்கும் போது, இந்த ஆட்சியின் நிலையை நினைத்து வேதனையாக இருக்கிறது. பணம் கொடுத்து வெற்றி பெறலாம் என நினைக்கின்றனர்.
100க்கும், 500க்கும் ஓட்டுப் போட்டால் இன்னும் 100 ஆண்டு ஆனாலும் திருச்செந்தூர் வளர்ச்சி பெறாது. சாலை இப்படியே தான் இருக்கும் என்றும் பிரேமலதா கூறியுள்ளார்.
பிரமேலதா பேசும் போது தொண்டர்கள் கூச்சலிட்டு கொண்டே இருந்தனர். அமைதியாக இருக்கும் படி முறை கேட்டுக் கொண்டார். அதே போல் கொடிகளை கொண்டு மறைத்து நின்றனர். கொடியை இறக்கும் படி பலமுறை கேட்டுக்கொண்டார். தொண்டர்கள் கேட்காததால் எரிச்சலடைந்த அவர் ஆறு கட்ட பிரசாம் செய்துள்ளேன். எங்கும் இப்படி தொண்டர்கள் கூச்சலிடவில்லை. இங்கு மட்டும் ஏன் இப்படி செய்கிறீர்கள் என, எரிச்சலடைந்து பேசுவதை குறைத்து கொண்டார்.