இம்முறை விஜயகாந்த் பிரச்சாரம் செய்ய மாட்டாரா?: பிரேமலதா பதில்
கோவை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிரச்சாரம் செய்ய மாட்டார் என்று பரவிய வதந்திக்கு தேமுதிக மகளிர் அணி தலைவி பிரேமலதா முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
மக்கள் நலக் கூட்டணியுடன் சேர்ந்தாகிவிட்டது, ஆனால் தேமுதிக தலைவர் விஜயகாந்தை பார்க்கவே முடியவில்லையே. செய்தியாளர்களையும் சரி, மக்களையும் சரி அவர் சந்திக்காமல் இருக்கிறாரே.
விஜயகாந்த் சிகிச்சைக்காக சிங்கப்பூர் செல்வதாக பேச்சு அடிபட்டதே. ஒரு வேளை சிங்கப்பூர் சென்றுவிட்டாரா? அதனால் தான் அவரை யாராலும் பார்க்க முடியவில்லையா. இம்முறை விஜயகாந்த் பிரச்சாரம் செய்ய மாட்டாராமே என்று ஆளாளுக்கு விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இந்நிலையில் இந்த விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் விஜயகாந்தின் மனைவியும், தேமுதிக மகளிர் அணி தலைவியுமான பிரேமலதா. கோவையில் நடந்த தேமுதிக தேர்தல் அறிக்கை விளக்க பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்ள பிரேமலதா வந்தார்.
அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
தேமுதிகவின் தேர்தல் அறிக்கை விளக்கக் கூட்டங்கள் மாநகராட்சிகளில் நடந்து வருகிறது. இன்னும் 5 நாட்களில் முதல்கட்ட பிரச்சாரம் முடிந்துவிடும். வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட பிறகு நானும், விஜயகாந்தும் சேர்ந்து 234 தொகுதிகளிலும் பிரச்சாரம் செய்வோம் என்றார்.