தமிழகத்தில் இந்தி எதிர்ப்பு என்பது தேவை இல்லாதது.. பிரேமலதாவின் அடடே பேட்டி !
சென்னை: தமிழகத்தில் இந்தி எதிர்ப்பு என்பது தேவை இல்லாதது என்று பிரேமலதா விஜயகாந்த் நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சியின் வெல்லும் சொல் மெய்தேடும் பயணம் என்ற நிகழ்ச்சியில் பிரேமலதா விஜயகாந்த் பங்கேற்றார். அப்போது அவர் கூறியதாவது: திராவிடம் என்பது அழியாத ஒன்று. 50 ஆண்டுக்கு முன் இருந்தது போல் அப்படியே இருக்க தேவை இல்லை. இந்தி திணிப்பு என்பது முடிந்து போன விஷயம். திமுகவின் இந்தி எதிர்ப்பு என்பது ஆட்சியை கைப்பற்றத்தான் நடைபெற்றது. அது திமுக வளர்ச்சிக்கு சாதகமாக அமைந்தது. திமுகவின் இந்தி எதிர்ப்பு போராட்டத்தால் சாமானிய தமிழர்கள் தான் பாதிக்கப்பட்டனர். தமிழகத்தில் இந்தி எதிர்ப்பு என்பது தேவை இல்லாதது என்று தெரிவித்தார்.
மேலும், பிறமொழியினர் தொடர்பான சீமான் கருத்துகளுக்கு பதில் தர முடியாது. சிறுபான்மை மக்களை அச்சுறுத்துகிறதா பாஜக என்பது உண்மையா என தெரியவில்லை. பாஜக மீதான குற்றச்சாட்டுகளை யாரும் நிரூபிக்கவில்லை.
பாஜக, கம்யூனிஸ்ட் என்றெல்லாம் தேமுதிக கருத்தியல் ரீதியாக பார்க்காது. தமிழகத்தில் தேமுதிக ஆட்சி நிச்சயம் அமையும். திமுக, அதிமுகவுக்கு மாற்றாக பெரிய அணி உருவாகும். வரும் காலத்தில் யாருடன் கூட்டணி என இப்போது சொல்ல முடியாது. விவசாயிகளின் பிரச்சனைக்கு மோடி அரசு எப்படி பொறுப்பாக முடியும் என்றும் பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.