மாணவர் சங்கத் தேர்தலை நடத்தக் கோரி பிரசிடென்சி கல்லூரி மாணவர்கள் போராட்டம்... போலீஸ் தடியடி
சென்னை: கல்லூரியில் மாணவர் சங்க தலைவர், உறுப்பினர்களுக்கான தேர்தலை நடத்தக் கோரி சென்னை மாநிலக் கல்லூரி மாணவர்கள் இன்று போராட்டம் மற்றும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சென்னை சேப்பாக்கத்தில் அமைந்துள்ளது ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட பிரெசிடென்சி காலேஜ் என்னும் மாநிலக் கல்லூரி. இக்கல்லூரியில் ஆண்டுதோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்களிலேயே கல்லூரி மாணவர்கள் தேர்தல் நடைபெற்று முடிந்துவிடும்.
இந்நிலையில் மாணவர்களுக்கிடையேயான தேர்தல் வன்முறைகளை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த வருடம் அக்டோபர் மாதம் ஆகியும் தேர்தல் நடத்தப்படவில்லை. இதனையடுத்து கல்லூரி மாணவர் தேர்தலை நடத்தியே தீர வேண்டும் என்று கோரிக்கை விடுத்த மாணவர்கள் இன்று காமராஜர் சாலை அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இப்போராட்டத்தில் புரட்சிகர மாணவர் முன்னணி அமைப்பும், அதனைச் சார்ந்த மாணவர்களும் மாநிலக் கல்லூரி மாணவர்களுக்கு ஆதரவாக கலந்து கொண்டனர். கடற்கரைச் சாலையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களைக் கலைந்து செல்லக் கோரிய போலீசார், அவர்கள் மீது தடியடி தாக்குதலை நடத்தினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மாணவர்கள் மீது வன்முறை பிரயோகம் செய்ததாக போலீசார் மீது குற்றச்சாட்டினைத் தெரிவித்துள்ளனர் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள்.