'பீதி' கிளப்பும் பீன்ஸ்... 'ஐயய்யோ' அவரை... விண்ணை முட்டும் காய் விலை!
சென்னை: தமிழ்நாட்டில் பருவமழை குறைவால் காய்கறிகளின் விளைச்சலும் குறைந்து விட்டது.
இந்த உற்பத்தி குறைபாடு கடைசியாக பிரதிபலிப்பது காய்கறிகளின் விலை ஏற்றத்தில்தான். மகசூல் பெருக்க என்ன செய்தாலும் முடியாமல் திணறுகின்றனர் விவசாயிகள்.
அப்படித்தான் சென்னையில் கடந்த சில நாட்களாக காய்கறிகளின் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து சைவ உணவை மட்டுமே நம்பியுள்ள பலரின் வயிற்றில் புளியைக் கரைத்து வருகின்றது.
தக்காளியால் தலையில் இடி:
தக்காளிதான் பலருக்கு மிகவும் எளிதான காய்கறியாக இருந்து வந்தது. ஏழைகளின் ஆப்பிளாய் இருந்த தக்காளி, இனி எட்டாத தூரம்தான் என்ற வகையில் கிலோ 25 ரூபாய்க்கு விற்ற தக்காளி தாவித்தாவி 65 ரூபாய்க்கு வந்து நிற்கின்றது. அழுகிப் போன, சுமாரான தக்காளியே கிலோ 60 ரூபாய் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.
பீதியைக் கிளப்பும் பீன்ஸ் விலை:
இருப்பதிலேயே ஆங்கிலக் காய்கறிகள்தான் எப்போதும் சீண்டவே ஆளில்லாமல் இருக்கும். தற்போது தக்காளி ரசத்துக்குதான் வழி இல்லை பீன்ஸ் உசிலியையாவது சுவைக்கலாம் என்றால் அட அந்த பீன்ஸ் விலை கிலோ 40 இல் இருந்து மளமளவென ஏறி 100 ஆகி தற்போது 110 ரூபாய்க்கு சென்று நிற்கின்றது.
பயமுறுத்தும் பாகற்காய் விலை:
சர்க்கரை நோயாளிகள் முதல் சல்லீசாய் வாங்குபவர்கள் வரையில் விரும்பும் காய் பாகற்காய்தான். ஆனால், அதுவும் விலை உயர்ந்து கிலோ 65 ரூபாயில் நிற்கின்றது.
ஐயய்யோ அவரைக்காய்:
அட்லீஸ்ட் அவரைக்காயை வெட்டி போட்டு குழம்பு வைக்கலாம் என்றால் அவரைக்காய் விலை 20இல் இருந்து 65க்கு உயர்ந்து குழம்பு ஆசையில் பெரிய குண்டை தூக்கி போட்டுள்ளது.
”கிர்” ஆக்கும் கேரட் விலை:
கண்ணுக்கு நல்லது எனப்படும் கேரட் விலை கிலோ 65 ரூபாய்க்கு உயர்ந்து, வாங்காட்டி பர்ஸுக்கு நல்லது என்ற நிலைமையை உண்டாக்கி உள்ளது.
சொக்க வைக்கும் சௌசௌ:
சட்டென்று மார்க்கெட்டில் கிடைக்கும் செளசெளவும் 20 ரூபாயில் இருந்து விலையில் தாவித்தாவி 50 ரூபாய்க்குச் சென்றுள்ளது.
பிரமிக்க வைக்கும் பீட்ரூட் விலை:
பீட்ரூட் விலை கேட்கவே வேண்டாம்....20 ரூபாயிலிருந்து உயர்ந்து 50 ரூபாயில் நின்று ரத்த நிற பீட்ரூட், மக்களின் ரத்தத்தை உறைய செய்துள்ளது.
உசிரை வாங்கும் உருளை, வெண்டை, வெங்காயம்:
சாம்பார் வெண்டைக்காய், எப்போதும் கைகொடுக்கும் உருளைக்கிழங்கு, வெட்டினால் கண்ணீர் வரவழைக்கும் வெங்காயம் ஆகியவற்றின் விலைகள் எகிறித் தாவியுள்ளதால், வெங்காயத்தை வெட்டாமலே கண்ணில் நீர் வருகின்றது. நல்ல வெங்காயத்தைப் பார்த்தே பல நாட்கள் ஆகிவிட்டது. அழுகல் வெங்காயத்திற்கே அவ்ளோ கிராக்கி.
காய்கறி ஆசைக்கு கத்திரி போடும் கத்தரிக்காய்:
கத்தரிக்காய் கெட்ட கேட்டுக்கு கிலோ 48 ரூபாய்க்கு விற்கின்றது. நாட்டு கத்தரிக்காயே கிலோ 40 ரூபாய் என்றால் பாருங்கள்.
ஹப்பா இதுதான் மிச்சம்:
இருக்கும் காய்கறிகளிலேயே முட்டை கோஸ்தான் கிலோ ரூபாய் 24க்கு விற்கப்படுகின்றது. கடைசியில் முட்டை சைவத்தில்தான் என்பதால் முட்டைக்கோஸையே பொறுத்துக் கொண்டு சாப்பிடவேண்டிய நிலையில் உள்ளனர் மக்கள்.
விளைச்சல் குறைவால் விலையேற்றம்:
கடந்த 2 மாதங்களாக நிலவிய வெயிலின் தாக்கத்தினாலும் தமிழ்நாட்டில் காய்கறி விளைச்சல் குறைந்து விட்டதாலும் வெளிமாநிலங்களில் இருந்துதான் அதிக காய்கறிகள் சென்னைக்கு வருகிறது. இதனால்தான் இந்த விலை ஏற்றம் என்று கோயம்பேடு காய்கறி வியாபாரிகள் கூறினர்.