கைதிகளுக்கு சலிச்சுப் போச்சு தேர்தல்.. வாக்களிக்க பலருக்கும் விருப்பமில்லையாம்!
சென்னை: தமிழகத்தில் உள்ள பல்வேறு சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளில் பெரும்பாலானோர் வரும் சட்டசபைத் தேர்தலில் வாக்களிக்க விருப்பம் இல்லை என்று தெரிவித்துள்ளதாக சிறைத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிறைக் கைதிகள் அனைவருக்கும் ஓட்டுரிமை கிடையாது. ரிமாண்ட் செய்யப்பட்டவர்கள், தண்டனை பெற்றவர்கள், விசாரணைக் கைதிகளுக்கு ஓட்டுப் போட அனுமதி கிடையாது.
மற்ற வகை கைதிகளுக்கு ஓட்டுப் போட அனுமதி உண்டு. இருப்பினும் அவர்களின் ஓட்டுப் போடும் தகுதியை தேர்தல் ஆணையம் முறையாக பரிசீலித்து வாக்களிக்க அனுமதி அளிக்கும்.

9 மத்திய சிறைகள்
தமிழகத்தில் 9 மத்திய சிறைகள் உள்ளன. 3 பெண்களுக்கான சிறப்பு சிறைகளும் உள்ளன. இவை தவிர 9 மாவட்ட சிறைகள் உள்ளன. இங்கு ஆயிரக்கணக்கான கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.

விருப்பம் இல்லை
இந்த நிலையில் வரும் சட்டசபைத் தேர்தலில் வாக்களிக்க விருப்பமா என்று கேட்டு அனைத்துக் கைதிகளிடமும் விருப்ப மனு கேட்டுள்ளனர் சிறை அதிகாரிகள். இதில் பலரும் வாக்களிக்க விருப்பமில்லை என்று தெரிவித்துள்ளனராம்.

விருப்பம் தெரிவித்த சிலர்
குறைந்த எண்ணிக்கையிலான கைதிகளே வாக்களிக்க விருப்பம் தெரிவித்துள்ளனராம். அவர்களது விருப்ப மனுக்களை தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு சிறை நிர்வாகம் அனுப்பி வைத்துள்ளதாம். அதைப் பரிசீலித்து தேர்தல் ஆணையம் வாக்களிக்க அனுமதி தரும்.

சிறைக்குள்ளேயே ஓட்டு
தகுதியுள்ள கைதிகள் வாக்குப் பதிவு நடைபெறும் மே 16ம் தேதி தத்தமது சிறைக்குள்ளேயே வாக்குச் சீட்டு முறை மூலம் வாக்களிப்பார்கள்.

காரணம் என்ன?
கைதிகள் வாக்களிக்க விரும்பாததற்குப் பல காரணங்கள் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. பல கைதிகள், தங்களது முகவரிக்குச் சென்று போலீஸாரும், தேர்தல் அதிகாரிகளும் முகவரி சரியா என விசாரணை நடத்தும்போது தாங்கள் சிறையில் இருப்பது தெரிந்து விடும் என்ற அச்சத்தால் வாக்களிக்க விருப்பமில்லை என்று கூறியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications