புழல் சிறையில் போலீசார் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய கைதிகள் வேறு சிறைகளுக்கு மாற்றம்
சென்னை: புழல் சிறையில் போலீசார் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய பன்னா இஸ்மாயில் உள்ளிட்ட 6 கைதிகள் வேறு சிறைக்கு மாற்றப்பட்டனர்.
கடந்த ஆண்டு ஆந்திர மாநிலம் புத்தூரில் பதுங்கி இருந்த தீவிரவாதிகளை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்ய முயன்றபோது போலீசார் மீது தாக்குதல் நடத்தப்பட்டதால் என்கவுண்டர் நடத்தி பன்னா இஸ்மாயில், போலீஸ் பக்ரூதீன், பிலால் மாலிக் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.

இதேபோல் சென்னை அம்பத்தூர் இந்து முன்னணி மாவட்ட அமைப்பாளர் சுரேஷ்குமார் உள்ளிட்ட இந்து அமைப்புகளை சேர்ந்த 5 பேரை கொலை செய்த வழக்குகளில் கைதான காஜா மொய்தீன், அப்துல் வகாப், ராஜா முகமது, தமீம்அன்சாரி, முன்னா என்ற முகமது ரபீக், மண்ணடி அப்துல்லா உள்பட 16 பேரும் இங்குதான் அடைக்கப்பட்டிருந்தனர்.
கடந்த வாரம் சுரேஷ்குமார் கொலை வழக்கில் கைதான முகமது ரபீக் ஜெயிலில் செல்போனில் பேசிக் கொண்டு இருந்தபோது, ஜெயிலர் இளவரசன் கண்காணித்து செல்போனை பறிமுதல் செய்துள்ளார். இதேபோல மேலும் சில கைதிகளிடம் இருந்து போதை பொருட்களும் கைப்பற்றப்பட்டது. இதனால் அவர்கள் அனைவரும் ஜெயிலரை பழிதீர்க்க திட்டமிட்டுள்ளனர்.
நேற்று மாலை வழக்கம் போல் ஜெயிலர் இளவரசன், சிறையில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தார். அவர் உயர் பாதுகாப்பு அறைக்கு சென்ற போது, அங்கு அடைக்கப்பட்டு இருந்த அனைத்து கைதிகளும் ஒன்று சேர்ந்து திடீரென ஜெயிலர் இளவரசனை தாக்கியுள்ளனர்.
எதிர்பாராத விதமாக நடந்த இந்த தாக்குதலில் நிலைகுலைந்த ஜெயிலர் இளவரசன், வெளியே ஓடியுள்ளார். அவரை விரட்டி வந்த கைதிகள், அங்கே கிடந்த செங்கல் மற்றும் உருட்டுக் கட்டைகளால் தாக்கினார்கள்.
இதைப் பார்த்த சிறை காவலர்கள் ஓடிவந்து இளவரசனை காப்பாற்ற முயன்றனர்.
அவர்களையும் அந்த கைதிகள் கற்களாலும், கட்டைகளாலும் கடுமையாக தாக்கியுள்ளனர். காவலர் முத்துமணியை இரும்பு கம்பியால் குத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் இளவரசன், முத்துமணி, ரவிமோகன், செல்வின் தேவராஜ் ஆகிய 4 பேர் படுகாயம் அடைந்தனர். அதற்குள் சிறை காவலர்கள் விரைந்து வந்து கைதிகளை மடக்கிப் பிடித்து அறையில் அடைத்து பூட்டினர்.
பின்னர் படுகாயம் அடைந்த 4 பேரையும் சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். அதில் கம்பியால் குத்துப்பட்ட முத்துமணி நிலைமை மோசமாக உள்ளதாம். ஐசியூ பிரிவில் அவருக்கு சிகிச்சையளிக்கப்படுகிறது.
இதனிடையே துணை ஜெயிலர் குமார், சிறை காப்பாளர் மாரி ஆகிய இருவரையும் கைதிகள் தங்கள் வசம் பிடித்து வைத்துக் கொண்டனர். காவலர்கள் அவர்களை விடுவிக்கும்படி கூறிய போது அவர்கள் மறுத்துவிட்டனர். இது தொடர்பாக அதிகாரிகள் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு விடுவித்துள்ளனர்.
புழல் சிறைக்குள் கைதிகள் தாக்குதல் நடத்திய சம்பவம் பற்றி தகவல் அறிந்ததும் சிறைத்துறை தலைவர் திரிபாதி உள்ளிட்ட உயர் போலீஸ் அதிகாரிகள் புழல் சிறைக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். கைதிகளை சேர்ந்து இருக்கவிடக்கூடாது என்ற திட்டத்தின்படி, கலவரத்தில் ஈடுபட்ட பன்னா இஸ்மாயில், மதுரை ஜெயிலுக்கும், போலீஸ் பக்ரூதீன் வேலூருக்கும், பிலால் மாலிக் கடலூர் சிறைக்கும் இரவோடு இரவாக மாற்றப்பட்டனர்.
இதேபோல் இந்து முன்னணி அமைப்பாளர் சுரேஷ்குமார் கொலையில் கைதாகி இருந்தவர்களில் காஜா மொய்தீன் சேலம் சிறைக்கும், மண்ணடி அப்துல்லா திருச்சி சிறைக்கும், முன்னா என்ற முகமது ரபீக் கோவை சிறைக்கும் அதிரடியாக மாற்றப்பட்டனர்.
புழல் சிறையில் தற்போது கூடுதலாக போலீசார் வரவழைக்கப்பட்டு நிறுத்தப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications