தேர்தல் ஜூரம் ஓய்ந்தது.. பற்றிக் கொண்ட +2 தேர்வு முடிவு ஜூரம்.. முண்டியடிக்கும் கல்லூரிகள்
நெல்லை: லோக்சபா தேர்தல் ஜூரம் தமிழகத்தில் கிட்டத்தட்ட ஓய்ந்து விட்டது. ரிசல்ட்டுக்காக மக்களும், கட்சிகளும் காத்துள்ளனர். இந்த நிலையில் பிளஸ்டூ ஜூரம் தற்போது விறுவிறுப்பாகியுள்ளது.
எதில் சேரலாம், எதைப் படிக்கலாம் என்ற மும்முரத்தில், விவாதங்களில், ஆலோசனைகளில் மாணாக்கர்களும், பெற்றோர்களும் தீவிரமாக உள்ளனர்.
அதேசமயம், பல தனியார் கல்லூரிகளில் இப்போதே அட்மிஷன் களை கட்டியிருப்பதால் பெற்றோர்களும், மாணவர்களும் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளனர்.
8.75 லட்சம் மாணவர்கள்
தமிழகத்தில் பிளஸ்டூ தேர்வு மார்ச் 3ம் தேதி தொடங்கி 25ம் தேதி வரை நடந்தது. இதில் 8 லட்சத்து 75 ஆயிரம் மாணவ, மாணவிகள் தேர்வு எழுதி முடிவுகளுக்காக காத்திருக்கின்றனர்.
திருத்தம் முடிந்தது
இவர்களுக்கான விடைத்தாள் திருத்தும் பணி 67 மையங்களில் நடந்தது. இந்த பணி முடிந்து தற்போது மாணவர்களின் மதிப்பெண் கணிணியில் பதிவேற்றம செய்யப்பட்டு வருகிறது.
மே 3ம் தேதி என்ஜீனியரிங் விண்ணப்பம்
மே 3ம் தேதி என்ஜீனியரிங் படிப்புக்கான விண்ணப்பம் வினியோகம் தொடங்கப்பட இருக்கிறது. இதற்காக சுமார் 2 லட்சம் விண்ணப்பம் தயார் நிலையில் இருக்கின்றன.
மே 14 முதல் மருத்துவ விண்ணப்பம்
மருத்துவ கல்லூரிகளில் மே 14ம் தேதி முதல் 31 தேதி வரை விண்ணப்பம் வினியோகம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளன.
கலைக் கல்லூகளில் சூடான அட்மிஷன்
இந்த நிலையில் கலை கல்லூரிகளும் 2014-15ம் கல்வி ஆண்டில் மாணவர்களை சேர்ப்பதற்காக தற்போதே தயாராகி வருகின்றன. மே 2ம் தேதி முதல் தனியார் கலை கல்லூரிகளில் விண்ணப்ப வினியோகம் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பல தனியார் கல்லூரிகளில் நேற்றே விண்ணப்ப வினியோகம் தொடங்கி விட்டன. குறிப்பாக தன்னாட்சி கல்லூரிகளில் விண்ணப்ப வினியோகம் கன ஜோராக நடக்கிறது.
படையெடுக்கும் மாணவர்கள்
இதனையடுத்து விண்ணப்பம் வழங்கும் கல்லூரிகளுக்கு மாணவ, மாணவிகள் காலை முதலே படையெடுத்தனர். அவர்கள் நீண்ட வரிசையில் நின்று விண்ணப்பங்களை வாங்கி சென்றனர்.
ரிசல்ட் வந்ததும்
இவர்களுக்கு பிளஸ்டூ ரிசல்ட் வந்ததும் மதிப்பெண் மற்றும் இடஓதுக்கீட்டு அடிப்படையில் அனுமதி வழங்கப்படும் என சம்பந்தப்பட்ட கல்லூரி வட்டாரத்தில் கூறப்படுகிறது.