வேலூர் அருகே பரபரப்பு.. தொடர்ந்து இரவு பணி வழங்கியதால் நர்ஸ் தற்கொலை.. உறவினர்கள் மறியல்
மனஉளைச்சல் காரணமாக நர்ஸ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வேலூர்: ஒரு மாதமாக தொடர்ந்து இரவு பணி வழங்கியதால் மன உளைச்சல் ஏற்பட்டு தனியார் மருத்துவமனை நர்ஸ் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால் உறவினர் சாலைமறியலில் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
காட்பாடி அடுத்த அரசமங்கலத்தை சேர்ந்தவர் ஜெனிபர். 23 வயதான இவர், வேலூர் பிரபல தனியார் மருத்துவமனை ஒன்றில் கடந்த 2 ஆண்டுகளாக நர்சாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு அதிகாரிகள் தொடர்ந்து இரவு பணி வழங்கி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளானார் ஜெனிபர்.
இந்நிலையில் நேற்று பணி முடித்துவிட்டு வீட்டுக்கு திரும்பிய ஜெனிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதனால் அதிர்ச்சியும் ஆத்திரமும் அடைந்த ஜெனபரின் உறவினர்கள் தனியார் மருத்துவமனை அருகே உள்ள வேலூர்-காட்பாடி சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
நூற்றுக்கும் மேற்பட்டோர் இந்த போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து 2 மணிநேரத்திற்கும் மேலாக கடுமையாக பாதிக்கப்பட்டது. தகவலறிந்து வந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சுமூக பேச்சுவார்த்தை நடத்தினர். இச்சம்பவம் குறித்து லத்தேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.