தாயின் உடலை மருத்துவ கல்லூரிக்கு தானமாக வழங்கிய கல்லூரி முதல்வர்!
நெல்லை: நெல்லையில் இறந்த தாயின் உடலை கல்லூரி பேராசிரியர் ஆராய்ச்சிக்காக மருத்துவ கல்லூரிக்கு தானமாக வழங்கினார்.
நெல்லை டவுன் சத்தியமூர்த்தி தெருவை சேர்ந்தவர் சங்கர்ராம். சங்கர்நகர் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி ராஜம். இவர்களது மகன் முரளி சங்கர். தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் முதல்வராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். இறந்த பின்னர் தனது உடல் உறுப்புகளை தானமாக வழங்க வேண்டும் என ராஜம் தனது குடும்பத்தினரிடம் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் உடல் நலம் பாதிக்கப்பட்டு ராஜம் நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலன் இல்லாமல் அவர் மாலை இறந்து விட்டார். இதன் பிறகு அவரது உடலை மருத்துவ கல்லூரி மாணவர்களின் ஆராய்சிக்காக தானமாக வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதன்படி நெல்லை ரோட்டரி கழக மாவட்ட உடல்தான பிரிவு அமைப்பின் பொறுப்பாளர் சரவணன் மூலம் முரளி சங்கர் மற்றும் குடும்பத்தினர் டீன் சித்தி அத்திய முனைவரா முன்னிலையல் உடலை தானமாக வழங்கினர்.
இதுகுறித்து முரளி சங்கர் கூறியதாவது: சில ஆண்டுகளுக்கு முன் சென்னையில் ஹிதேந்திரன் இதயம் உள்ளிட்ட உடல் உறுப்புகள் பலருக்கு தனமாக வழங்கப்பட்டு பொருத்தப்பட்டது. இதை நாளிதழில் பார்த்து தெரிந்து கொண்டேன். இந்த சம்பவம் எனது தாயையும் உடல் தானம் வழங்க தூண்டியது. நான் இறந்தால் எனது உடல் யாருக்கும் பயன்படாமல் மண்ணுக்கு போக கூடாது என அவர் தெரிவித்து வந்தார்.
அவரது விருப்பப்படி கண்கள் மற்றும் உறுப்புகளை தானமாக வழங்கியுள்ளோம். 77 வயதாகும் என் தந்தையும் தனது உடலை தானமாக வழங்க முன் வந்துள்ளார். நானும் எனது உடலை தானமாக வழங்க முடிவு செய்துள்ளேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் அங்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications