நித்யானந்தா சீடர்களை அடித்து விரட்டிய தஞ்சை மக்கள் !
தஞ்சாவூர்: தஞ்சாவூரில் உள்ள பால்சாமி மடத்திற்கு வந்த நித்தியானந்தாவின் சீடர்களை அப்பகுதி மக்கள் அடித்து விரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் வடக்கு வாசல் பகுதியில் அமைந்துள்ளது பால்சாமி மடம். இந்த மடத்திற்கு சொந்தமான வயல்வெளிகள் உள்ளன. இந்த மடத்தினை நிர்வகித்து வந்த பால்சாமி சித்தர் இறப்பிற்குப் பின்னர் துருவர் சித்தர் என்பவர் தற்போது நிர்வகித்து வருகிறார்.

இந்நிலையில் பெங்களூரில் உள்ள நித்தியானந்தா ஆசிரமத்தைச் சேர்ந்த 4 பெண்கள் உட்பட 9 சீடர்கள் தஞ்சாவூர் வந்துள்ளனர். இதனையடுத்து அந்த சீடர்கள் பால்சாமி மடம் தங்களுக்குச் சொந்தமானது என கூறி அங்கிருந்தவர்களை வெளியேறும்படி வற்புறுத்தியதாக கூறப்படுகிறது.
இதனால் ஆசிரம நிர்வாகிகளுக்கும் நித்தியானந்தா சீடர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதன் பின்னர் அங்கு திரண்ட பொதுமக்களும் நித்தியானந்தாவின் சீடர்களை ஓட ஓட அடித்து விரட்டியுள்ளனர். இதையடுத்து தகவல் அறிந்த போலீசார் அந்த சீடர்களை தஞ்சை மேற்கு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு நிலவியது.












Click it and Unblock the Notifications