மக்களை மிரட்டும் சுங்கச்சாவடிகள்.. சாட்டையை சுழற்றும் நீதிபதிகள்!
மக்களுக்கு எதிராக செயல்பட்டு வரும் சுங்கச்சாவடிகள் மீது நீதிபதிகள் சரமாரியாக குற்றம்சாட்டியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை: மக்களுக்கு எதிராக செயல்பட்டு வரும் சுங்கச்சாவடிகள் மீது நீதிபதிகள் சரமாரியாக குற்றம்சாட்டியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வாகனங்கள் பயன்பாடு அதிகரிப்புக்கு ஏற்ப சுங்கச்சாவடிகளும் அதிகரித்து வருகிறது. ஒப்பந்தம் முடிந்தும் எந்த கணக்குவழக்கும் இன்றி குருட்டான் போக்கில் சுங்கச்சாவடிகள் கட்டணம் வசூலித்து வருகின்றன.
காரணம் கேட்கும் மக்களுக்கும் முறையாக விளக்கமளிக்காமல் பல சுங்கச்சாவடிகள் வன்முறையை கையிலெடுத்த சம்பவங்களும் அரங்கேறியுள்ளன. மதுரை, திருச்சி என எங்கு சென்றாலும் ஒரு பெரும் தொகையை பயணத்தின்போதே சுங்கச்சாவடிகளுக்கு என எடுத்து வைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

அதிகரிக்கும் கட்டணம்
இந்த கட்டண கொள்ளைக்கு எதிராக பாமக, நாம் தமிழர் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் பலமுறை போராட்டம் நடத்தியும் இப்பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கவில்லை. மாறாக சுங்கக்கட்டணம் மட்டுமே நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

தெனாவட்டாக வேலை பார்க்கும் ஊழியர்கள்
பல நேரங்களில் தெனாவட்டாக வேலை பார்க்கும் சுங்கச்சாவடி ஊழியர்கள் சுங்கச்சாவடியில் காத்திருக்கும் ஆம்புலன்களை கூட கண்டுகொள்வதில்லை. ஊழியர்களின் அலட்சியத்தால் சுங்கச்சாவடிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு சில சமயங்களில் உயிரிழப்புகளுக்கும் வழிவகுத்துள்ளது.

சுங்கச்சாவடிகளில் தகராறு
சுங்கச்சாவடிகளில் காக்க வைக்கப்படுவதால் மக்கள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். ஒப்பந்தம் முடிந்தும் கட்டணக்கொள்ளையில் ஈடுபட்டு வரும் சுங்கச்சாவடிகளால் பல இடங்களில் பொதுமக்களுக்கும் ஊழியர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

சவுக்கடி கொடுத்த நீதிபதிகள்
இந்நிலையில் சுங்கச்சாவடிகளில் ரவுடிகள் தான் பணியில் அமர்த்தப்பட்டிருப்பதாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் கடுமையாக சாடியுள்ளனர். சமூக விரோதிகள் மூலமே சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்கப்படுவதாக சவுக்கடி கொடுத்துள்ளனர்.

தீர்வு கிடைக்குமா?
நீதிபதிகள் சாட்டையை சுழற்றியுள்ளதால் இனியாவது வீதி மீறலில் ஈடுபடும் சுங்கச்சாவடிகள் மீது அரசு நடவடிக்கை எடுக்குமா? சுங்கச்சாவடிகள் பொறுப்புணர்ந்து செயல்படுமா? கட்டண கொள்ளைக்கு தீர்வு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது..












Click it and Unblock the Notifications