பயிற்சி டிரைவர்களால் இயக்கப்படும் பேருந்துகள்... பீதியோடு பயணிக்கும் மக்கள்!
சென்னை: போக்குவரத்து ஊழியர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்தால் பல இடங்களில் தற்காலிக ஓட்டுநர்கள் பேருந்தை இயக்கி வருகின்றனர். இதனால் பத்திரமாக போய்ச் சேருவோமா என்ற அச்சத்தில் பயணிகள் ஆழ்ந்துள்ளனர்.
ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து தமிழகம் முழுவதும் போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், நேற்று முதல் பயணிகள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.
சென்னையில் பேருந்துகளுக்கு மாற்றாக மக்கள் ரயிலைப் பயன்படுத்தும் வசதி உள்ளது. ஆனால், மதுரை, நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட மற்ற மாவட்டங்களில் பெரும்பாலான பேருந்துகள் ஓடாததால் மக்கள், கிடைக்கும் பேருந்துகள் மற்றும் ஆட்டோக்களைப் பயணத்திற்குப் பயன்படுத்தி வருகின்றனர்.
மொத்த பேருந்துகளில் 40 சதவீத பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவையும் பெரும்பாலும் பயிற்சி மற்றும் மாற்று ஓட்டுநர்களால் இயக்கப்படுவதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
ஏற்கனவே, கடந்த 2011ம் ஆண்டு இதேபோல் போக்குவரத்து ஊழியர்களின் போராட்டத்தின் போது அனுபவம் இல்லாத ஓட்டுநர்களால் 28 பேர் பலியானார்கள். அதனைத் தற்போது நினைவு கூறும் மக்கள், ‘தற்போதைய சூழலில் பேருந்துகளில் பயணம் செய்ய பயமாகவும் இருக்கிறது, ஆனால் வேறு வழியும் இல்லை' என கலக்கத்துடன் கூறுகின்றனர்.
நன்கு பழக்கப்பட்ட ஓட்டுநர்களுக்கே இந்த குண்டும் குழியுமான சாலைகளில் விபத்து ஏற்படும் போது, பயிற்சி ஓட்டுநர்கள் எப்படி இதை சமாளிப்பார்கள் என அவர்கள் கவலையுடன் பேசிக் கொள்கின்றனர்.