தற்கொலைக்கு முயற்சித்த அரவிந்தர் ஆசிரமப் பெண்கள் பலாத்காரம் - 2 பேர் கைது
புதுச்சேரி: அரவிந்தர் ஆசிரமத்திலிருந்து வெளியேற்றப்பட்ட பெண்கள் கடலில் குதித்துத் தற்கொலைக்கு முயன்ற போது, அவர்களில் ஹேமலதா என்பவரை கடற்கரையில் வைத்து பலாத்காரம் செய்த 2 பேரை புதுவை போலீசார் கைது செய்துள்ளனர்.
பீகாரைச் சேர்ந்த சகோதரிகளான அருணா, ராஜஸ்ரீ, நிவேதிதா, ஜெயஸ்ரீ, ஹேமலதா ஆகியோர் கடந்த பல ஆண்டுகளாக புதுச்சேரி அரவிந்தர் ஆசிரமத்தில் தங்கி இருந்து சேவை புரிந்து வந்தனர். இந்நிலையில், நீதிமன்ற உத்தரவுப்படி கடந்த 17ம் தேதி இவர்களைப் போலீசார் வெளியேற்ற முயற்சித்தனர். அப்போது சகோதரிகளில் ஹேமலதா என்பவர் ஆசிரம வளாக அடுக்குமாடிக் குடியிருப்பின் மொட்டை மாடிக்குச் சென்று தற்கொலை மிரட்டல் விடுத்தார்.
விரைந்து செயல்பட்டு சகோதரிகளை மீட்ட போலீசார், அவர்களை பெற்றோரிடம் போலீசார் ஒப்படைத்தனர்.
இந்நிலையில், மறுநாள் காலை தனது பெற்றோருடன் சகோதரிகள் காலாப்பட்டு அருகே கடலில் குதித்து தற்கொலைக்கு முயன்றனர். அதில், இரண்டு சகோதரிகள் மற்றும் தாயார் பரிதாபமாக உயிரிழந்து விட மீதமுள்ளவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த நிலையில், தாங்கள் தற்கொலைக்கு முயன்றபோது தன்னை இரண்டு பேர் பாலியல் பலாத்காரம் செய்ததாக காவல்துறையினரிடம் சகோதரிகளில் ஒருவரான ஹேமலதா என்பவர் புகார் அளித்தார். இப்புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து நடத்திய விசாரணையில், விழுப்புரம் மாவட்டம் பிள்ளைசாவடியை சேர்ந்த விஜயகுமார், ராஜா ஆகியோரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர்கள் போலீசாரிடம் குற்றத்தை ஒப்புக்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.