புதுவை: காதல் மனைவி தூக்கிட்ட அதே சேலையில் தனது உயிரையும் மாய்த்துக் கொண்ட வாலிபர்
புதுவை: காதல் மனைவி தற்கொலை செய்து கொண்டதால் மனமுடைந்த கணவர், மனைவி தற்கொலை செய்து கொண்ட அதே சேலையில் தானும் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்வம் புதுவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுவை மாநிலம் வில்லியனூரை அடுத்த கோபாலன் கடை பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளி பழனிவேல் (26). இவரது மனைவி பெயர் முத்தமிழ் (21). கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் தான் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். ஆனால், திருமணம் ஆன நாள் முதற்கொண்டு இருவருக்குள்ளும் பிரச்சினை இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த முத்தமிழ் கடந்த 4-ந் தேதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து வில்லியனூர் போலீசார் மற்றும் தாசில்தார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்நிலையில் மனைவி இறந்த சோகத்தில் இருந்துள்ளார் பழனிவேல். நேற்று மாலை வீட்டில் தனிமையில் இருந்த பழனிவேல், முத்தமிழ் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட அதே சேலையில் தானும் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
தற்போது இது குறித்தும் வில்லியனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்