காவிரி வாரியம் அமைக்காமல் நீதிமன்ற அவமதிப்பு... மத்திய அரசு மீது புதுச்சேரி கொறடா வழக்கு!
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசு மீது புதுச்சேரி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளது.
புதுச்சேரி : உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசு மீது புதுச்சேரி அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளது. புதுச்சேரி கொறடா சார்பில் நீதிமன்ற அவமதிப்பு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
காவிரி நீர் பல ஆண்டுகளாகவே அரசியல் காரணங்களால் மறுக்கப்பட்டு வருகிறது. காவிரி நீரால் தமிழகம், கேரளா, கர்நாடகா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்கள் பயனடைகின்றன. புதுச்சேரி யூனியன் பிரதேசத்தை சேர்ந்த காரைக்கால் காவிரியின் கடைமடை பகுதி.
கர்நாடகா தரவேண்டிய நீரை தமிழகத்திற்கு தொட்டுக்கோ, துடைத்துக்கோ என்றே தருவதால் கடைமடை வரை காவிரி நீர் போவது என்பது இயலாத காரியமாக இருக்கிறது. இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பில் புதுச்சேரி மாநிலத்திற்கு 7 டிஎம்சி நீர் ஒதுக்கி உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் அளித்த உத்தரவை மத்திய அரசு செயல்படுத்தவில்லை. இதனையடுத்து மத்திய அரசு மீது அவமதிப்பு வழக்கு தொடர புதுச்சேரி அரசு முடிவு செய்தது.ஆனால் துணை நிலை ஆளுநர் கிரண்பேடி தடை போட்டதால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு போடப்படாமல் இருந்தது.
இந்நிலையில் கிரண்பேடி நேற்று நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர அனுமதி அளித்ததன் பேரில், புதுச்சேரி கொறடா அனந்தராமன் உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசுக்கு எதிராக மனு தாக்கல் செய்துள்ளார். தமிழக அரசு சார்பில் மத்திய அரசு மீது தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஏப்ரல் 9ம் தேதி விசாரணைக்கு வருகிறது. அந்த வழக்குடனே சேர்த்து இந்த மனுவும் விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்படலாம்.