இந்தியாவின் பொருளாதாரத்தையே சீரழித்துவிட்டது பா.ஜ.க - புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி பாய்ச்சல்
பா.ஜ.க.,வின் நடவடிக்கைகள் இந்தியப் பொருளாதாரத்தை சீரழித்துவிட்டதாக குற்றம் சாட்டினார் நாராயணசாமி
புதுச்சேரி : இந்தியப் பொருளாதாரத்தை மோடி தலைமையிலான அரசு சீரழித்துவிட்டதாகக் குற்றம்சாட்டினார் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி.
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி நினைவு தினக்கூட்டம் இன்று புதுச்சேரியில் நடந்தது. இதில் பேசிய புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, ' தற்போது மத்தியில் ஆளும் பா.ஜ.க இந்தியாவின் பொருளாதாரத்தையே முற்றிலுமாக சிதைத்துவிட்டது. அதற்கு ஜி.எஸ்.டி, பணமதிப்பிழப்பு போன்ற நடவடிக்கைகள் தான் காரணம் என்றார்.

மேலும், இந்த அரசின் நடவடிக்கையால், ஏழை எளிய மக்கள்,விவசாயிகள், சிறு குறு வியாபாரிகள், மாணவர்கள் என பெரிய அளவில் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், ஆனால் இந்த அரசு அதைப் பற்றி எல்லாம் கவலையேபடாமல் இருப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
நேரு, இந்திரா காந்தி, மன்மோகன் சிங் ஆகியோர் பிரதமராக இருந்த காலத்தில் கொண்டுவரப்பட்ட திட்டங்களேயே மீண்டும் செயல்படுத்துவதாகவும், அதற்கு கவர்ச்சிகரமான பெயரை மட்டும் யோசிக்க இந்த அரசு மெனக்கெடுவதாகவும் அவர் விமர்சித்தார்.
மேலும், புதுச்சேரியில் சிலர் பா.ஜ.க.,வின் நேரடி ஏஜெண்டுகளாகவே செயல்படுகிறார்கள் என்று ஆளுநர் கிரண் பேடியை மறைமுகமாக விமர்சித்தார். குஜராத் தேர்தல் குறித்து பேசிய அவர், மக்கள் அங்கு பா.ஜ.க.,விற்கு பதிலடி கொடுக்கத் தயாராகி வருகிறார்கள் என்று குறிப்பிட்டார்.
வருகிற நவம்பர் 8ம் தேதியை இந்தியப் பொருளாதாரத்தின் கருப்பு நாளாக புதுச்சேரி காங்கிரஸ் மற்றும் கூட்டணிக் கட்சிகள் கடைபிடிக்க இருப்பதாகவும் நாராயணசாமி தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications