மக்கள் எதையும் உண்ணக் கூடாது என்ற கோமாளித்தனத்தையும் மத்திய அரசு செய்யும்.. நாராயணசாமி பொளேர்
சென்னை: நாட்டு மக்கள் எதையும் உண்ணக் கூடாது என்ற கோமாளித்தனத்தையும் மத்திய அரசு விரைவில் அரங்கேற்றும் என்று புதுவை முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.
கருணாநிதியின் 94-ஆவது பிறந்தநாள் விழாவும், அரசியலுக்கு வந்து 60 ஆண்டுகள் நிறைவானதை தொடர்ந்து வைரவிழாவும் இன்று மாலை தொடங்கியது. இதில் முதன்மை பொதுச் செயலாளர் துரைமுருகன் வரவேற்புரை அளித்து பேசினார்.

அப்போது புதுவை முதல்வர் நாராயணசாமி பேசுகையில், காஷ்மீரும், கன்னியாகுமரியும் சங்கமித்திருக்கும் விழாவாக இது கருதப்படுகிறது. உலகிலேயே சட்டசபையில் 14 முறை வெற்றி பெற்ற ஒரே தலைவர் கருணாநிதி. அவர் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடிப்பார்.
இந்திய முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் காதர் மொய்தீன் கூறியது போல் கருணாநிதிக்கு மத்திய அரசு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும். மதவாத சக்திகளை ஒடுக்க மதசார்பற்ற கட்சிகள் இந்த மேடையில் திரண்டுள்ளன.
இந்திய அரசியலில் மிகப் பெரிய மாற்றம் ஏற்பட உள்ளது. டெல்லியில் ராகுல் காந்தி தலைமையில் மதசார்பற்ற கட்சிகளும், தமிழகத்தில் ஸ்டாலின் தலைமையில் மதசார்பற்ற கட்சிகளும் ஒன்றிணையும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.
தமிழகத்தில் நடப்பது பொம்மை ஆட்சி, டெல்லியில் பாஜக தலைவர்கள் ரிமோட் கன்ட்ரோல் வைத்து தமிழகத்தை இயக்குகின்றனர். ரிமோட்டை அழுத்தி நில் என்றால் நிற்கிறார்கள், உட்கார் என்றால் உட்காருகிறார்கள்.
டெல்லியில் சர்வாதிகார ஆட்சி நடந்து வருகிறது. மதத்தை கடைபிடிப்பது தனிமனித சுதந்திரம். அதை தடுக்கவோ, மறுக்கவோ எந்த சக்திக்கும் இடமில்லை. மாட்டிறைச்சி உண்ணக் கூடாது என்று சட்டம் இயற்றியுள்ளார்கள். இன்னும் கொஞ்ச நாள் கழித்து ஆட்டிறைச்சி, மீன் இறைச்சிகளை உண்ணக் கூடாது என்பார்கள்.
பின்னர் மக்கள் காய்கறிகளையும் உண்ணக் கூடாது என்றும் எதையும் உண்ணக் கூடாது என்றும் கோமாளித்தனத்தை மத்திய அரசு அரங்கேற்றும். இவற்றை ஒடுக்க சமூக நீதியை கடைபிடிக்க வேண்டும். போராளித்தனமான குணத்தை நாம் பின்பற்ற வேண்டும் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications