ரவுடி சரத்குமார், ரவுடி செல்வக்குமார், நீங்க ஊருக்குள் நுழையக் கூடாது ஓ.கே.!!
புதுச்சேரி: புதுச்சேரியில் மக்களை அச்சுறுத்தும் வகையில் செயல்பட்டு வந்த இரண்டு ரவுடிகளுக்கு ஊருக்குள் நுழைய தடை விதிக்கப்படவுள்ளது.
புதுச்சேரியில் ரவுடிகள் தொல்லை அதிகரித்து வருவதாக அங்குள்ள மக்கள் தொடர்ந்து குறை கூறி வருகின்றனர். சில வாரங்களுக்கு முன்பு அங்கு வணிகர்கள் கடையடைப்புப் போராட்டமும் நடத்தி அரசுக்குக் கண்டனம் தெரிவித்தனர்.
இதையடுத்து மாநில துணை நிலை ஆளுநரும் சட்டம் ஒழுங்கு குறித்து கவலை தெரிவித்திருந்தார். இந்த நிலையில் இரண்டு ரவுடிகளுக்கு ஊருக்குள் நுழைய மாவட்ட ஆட்சித் தலைவர் தடை விதித்து உத்தரவிடவுள்ளார்.
புதுவை முத்தியால்பேட்டை வாழைக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் சரத்குமார்(22). ரவுடியான இவர் மீது குழு மோதல் புகார்கள் மற்றும் கொலை வழக்குகள் உள்ளன. இவரால் அந்தப் பகுதியில் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படுவதால், அவரை மூன்று மாதங்கள் ஊருக்குள் நுழைய தடை விதிக்க வேண்டும் என்று முத்தியால்பேட்டை போலீசார் புதுவை ஆட்சியருக்குப் பரிந்துரைத்துள்ளனர்.
இதே போல் முதலியார்பேட்டை ஐயனார் கோவில் தெருவைச் சேர்ந்த ரவுடியான செல்வக்குமார்(42) மீதும் நடவடிக்கை எடுக்கும் வகையில், அவரை மூன்று மாதங்கள் வரை புதுவைப் பகுதிக்குள் நுழைய தடை விதிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் தீபக்குமாருக்கு முதலியார்பேட்டை போலீசார் பரிந்துரைத்துள்ளனர்.