புதுச்சேரியில் பரபரப்பு! 6 ஆளும் கட்சி அதிருப்தி எம்.எல்.ஏக்கள் சபாநாயகருடன் சந்திப்பு!!
புதுச்சேரியில் கடந்த இரண்டரை ஆண்டுகாலமாக முதல்வராக பதவி வகித்தார் என்.ஆர். காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி. ஆனால் எதிர்க்கட்சிகள் அனைத்துமே ரங்கசாமியின் செயல்பாடுகளை விமர்சித்து வருகின்றனர்.
உச்சகட்டமாக ஆளுநர் கட்டாரியாவும் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று கூறி வருகிறார். இந்த நிலையில் ஆளும் என்.ஆர். காங்கிரசிலேயே ரங்கசாமிக்கு எதிராக அதிருப்தி குரல் எழுந்துள்ளது. என்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு மொத்தம் 15 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். இவர்களில் 6 எம்.எல்.ஏக்கள் இன்று ரகசிய கூட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர்.
இந்தக் கூட்டத்துக்கு கொறடா நேரு தலைமை வகித்தார். எம்.எல்.ஏக்கள் கல்யாணசுந்தரம், கார்த்திகேயன், அங்காளன், வைத்தியநாதன், அசோக் ஆனந்து, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் முதல்வர் ரங்கசாமியின் செயல்பாடுகள் பற்றிய தங்களது அதிருப்தியை எம்.எல்.ஏக்கள் பகிர்ந்து கொண்டதாக தெரிகிறது.
முதல்வர் ரங்கசாமிக்கு தெரியாமல் எம்.எல்.ஏக்கள் நடத்திய ரகசியக் கூட்டத்தால் அந்த கட்சியில் பிளவு ஏற்படக் கூடும் எனத் தெரிகிறது. இந்த ரகசியக் கூட்டத்தால் புதுச்சேரி அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.
சபாநாயகருடன் ஆலோசனை
இந்த கூட்டத்துக்குப் பின்னர் 6 எம்.எல்.ஏக்களும் சபாநாயகர் சபாபதியை நேரில் சந்தித்து பேசினர். அப்போது, தங்களுடைய தொகுதிகளில் அரசு நலத்திட்ட பணிகள் நடைபெறவில்லை என்று புகார் கூறினர். சபாநாயகரோ, முதல்வர் ரங்கசாமியை சந்தித்துப் பேசலாம் என ஆலோசனை தெரிவித்தார்.
பிளவு இல்லையே
ஆனால் தமது கட்சியில் எந்த ஒரு பிளவும் இல்லை. அரசுக்கும் ஆபத்து இல்லை என்று இன்று செய்தியாளர்களிடம் பேசிய புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி கூறியுள்ளார்.