விஜயபாஸ்கர் கல்குவாரியில் விதிமீறலா? - குடையும் மத்திய பொதுப்பணித்துறை அதிகாரிகள்
அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான கல்குவாரியில் மத்திய பொதுப் பணித்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்
புதுக்கோட்டை: சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான கல்குவாரியில் மத்திய பொதுப் பணித்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் திருவேங்கைவாசலில் உள்ள குவாரியில் விதிமீறல் எதுவும் உள்ளதா என்று அவர்கள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் அதிமுக அம்மா அணி வேட்பாளர் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக, வாக்காளர்களுக்கு பணம் வழங்கப்படுவதாகப் புகார் எழுந்தது. கடந்த வெள்ளிக்கிழமையன்று சென்னையில் உள்ள சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் வீடு, புதுக்கோட்டை, திருச்சி ஆகிய இடங்களில் உள்ள அவரது உறவினர்கள் வீடு, தொழில் நிறுவனங்களில் வருமான வரி சோதனை நடைபெற்றது.

விஜயபாஸ்கர் வீடு ரெய்டு
விஜயபாஸ்கர் வீடு, அவருடைய எம்எல்ஏ அறையில் கட்டுக்கட்டாக ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. அதில் சில பக்கங்கள் ஊடகங்களில் கசிந்தன. வாக்காளர்களுக்கு ரூ.89 கோடி பணம் வழங்கியதற்கான ஆதாரம் சிக்கியது. அதில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெயர் உள்பட அமைச்சர்கள், கட்சியில் உள்ள நிர்வாகிகளின் பெயர்கள் இடம்பெற்றிருந்தன.

அதிரடி ரெய்டு
இதே போல சென்னை கொட்டிவாக்கத்தில் உள்ள நடிகர் சரத்குமார் வீடு, சென்னை சாலிகிராமத்தில் உள்ள எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் கீதாலட்சுமி வீடு, சென்னை சிட்லபாக்கத்தில் உள்ள முன்னாள் எம்.பி. ராஜேந்திரன் வீடு என மொத்தம் 35 இடங்களில் வருமான வரி சோதனை நடைபெற்றது.

வருமானவரி அலுவலகத்தில் ஆஜர்
இதையடுத்து வருமான வரி அலுவலகத்தில் நேரில் விளக்கமளிக்க அவர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. அதன்படி நேற்று அமைச்சர் விஜயபாஸ்கர், சரத்குமார், சிட்லபாக்கம் ராஜேந்திரன் ஆகியோரிடம் விசாரணை நடந்தது. அமைச்சர் விஜய பாஸ்கர், தன்னிடம் உள்ள ஆவணங்களைத் தாக்கல் செய்ய, கால அவகாசம் கேட்டார்.

கல்குவாரியில் ரெய்டு
இந்நிலையில் அமைச்சர் விஜய பாஸ்கருக்கு சொந்தமான புதுகோட்டை திருவேங்கை வாசலில் உள்ள கல்குவாரியில் மத்திய பொதுப்பணித்துறையினர் இன்று ஆய்வு மேற்கொண்டனர். இன்று காலை முதல் தொடர்ந்து ஆய்வு நடந்து வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

குவாரியில் விதிமீறலா?
அமைச்சர் விஜயபாஸ்கர் 15 ஆண்டுகளாக இந்த குவாரியை நடத்தி வருகிறார். கடந்த 7ஆம்தேதி வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கண்டு பிடிக்கப்பட்ட ஆவணங்களை எடுத்து சென்றனர். அதில் விதியை மீறி குவாரியில் கற்கள் வெட்டி எடுக்கப்படுவது தெரிய வந்தது. அதுபற்றி மத்திய பொதுப்பணித்துறைக்கு அறிக்கை அனுப்பினர். அதன் அடிப்படையில் இன்றைய சோதனை நடத்தப்பட்டு வருகிறது

மத்திய பொதுப்பணித்துறை
டெல்லியில் இருந்து மத்திய பொதுப் பணித்துறை அதிகாரிகள் 10 பேர் வந்துள்ளனர். அங்குள்ள அலுவலகத்தில் பணியில் இருந்த ஊழியர்களிடம் குவாரியின் செயல்பாடுகள், கற்கள் வெட்டி எடுப்பது குறித்து காலை 7 மணி முதல் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பலத்த பாதுகாப்பு
குவாரியில் அரசு அனுமதியை மீறி கற்கள் வெட்டி எடுக்கப்படுகிறதா? கனிம வளத்துறையின் விதிகள் முறையாக கடைபிடிக்கப்பட்டு கற்கள் வெட்டப்படுகிறதா? முறைப்படி குவாரி இயங்குகிறதா? எனவும் கேள்வி எழுப்பினர். மத்திய பொதுப்பணித்துறை அதிகாரிகளின் ஆய்வை ஒட்டி 10க்கும் மேற்பட்ட சிஆர்பிஎப் அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications