காஞ்சி இரும்புலிச்சேரி தீவு துண்டிப்பு- படகில் நிவாரணப் பொருட்களுடன் சென்ற வைகோ, திருமா, முத்தரசன்!!
காஞ்சிபுரம்: கனமழை வெள்ளத்தால் காஞ்சிபுரம் மாவட்டம் இரும்புலிச்சேரி தீவானது பிற பகுதிகளில் இருந்து துண்டிக்கப்பட்டுவிட்டது. இந்த தீவு கிராமத்துக்கான நிவாரணப் பொருட்களை மக்கள் நலன் கூட்டணி தலைவர்களான வைகோ, திருமாவளவன் மற்றும் முத்தரசன் ஆகியோர் ஒரு படகில் எடுத்துச் சென்று வழங்கினர்.
காஞ்சிபுரம் மாவட்டம் திருக்கழுக்குன்றத்தை அடுத்த இரும்புலிச்சேரி, எடையாத்தூர் ஆகியவை பாலாற்றில் தீவுகளாக உள்ளன. இந்த 2 ஊராட்சிகளிலும் மொத்தம் 7 கிராமங்கள் உள்ளன. இதில் சுமார் 3,000 பேர் வசிக்கின்றனர்.
இரும்புலிச்சேரி தீவை பிற பகுதிகளுடன் இணைக்கும் வகையில் நெரும்பூர்- வாயலூர் சாலையில் 30 ஆண்டுகளுக்கு முன்பு மேம்பாலம் ஒன்று கட்டப்பட்டது. தீவில் உள்ள எடையாத்தூரை ஆற்றின் மறுகரையில் உள்ள பாண்டூர் கிராமத்துடன் இணைக்கும் நடைபாலம் ஒன்றும் இருந்தது.
இந்த நடைபாலத்தின் அருகே மற்றொரு மேம்பாலம் கட்டும் பணி மேற்கொள்ளப்பட்டது. இதற்காக தூண்களும் அமைக்கப்பட்டன. ஆனால் கடந்த மாதம் பெய்த மழையால் பாலாற்றில் வெள்ளம் பெருகெக்டுத்து ஓடியது. இதில் நடைபாலம், புதிய மேம்பால கட்டுமானங்கள் பல பாலாற்றில் அடித்துச் செல்லப்பட்டன.
பின்னர் கடந்த மாதம் 24-ந் தேதி கொட்டிய மற்றொரு கனமழையில் எஞ்சிய நடைபாலம் மற்றும் மேம்பால பணிகளும் அடித்துச் செல்லப்பட்டன. இதனால் ஒட்டுமொத்தமாக இரும்புலிச்சேரி தீவு பிற பகுதிகளில் இருந்து துண்டிக்கப்பட்ட நிலைக்குள்ளானது. அப்பகுதி மக்களுக்கான அத்தியாவசியப் பொருட்களை மாவட்ட நிர்வாகம் வழங்கி வந்தது.
இந்நிலையில் இந்த தீவு பகுதிக்கு மக்கள் நலன் கூட்டணியின் தலைவர்களான ம.தி.மு.க. பொதுச்செயலர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலர் இரா. முத்தரசன் ஆகியோர் படகு ஒன்றின் மூலமாக நிவாரணப் பொருட்களை கொண்டு சென்று வழங்கினர்.
காவல்துறை தடுத்தது?
அப்போது நிவாரணப் பொருட்களை கொடுக்க விடாமல் காவல்துறை கெடுபிடி செய்ததாக கூறப்படுகிறது. அத்துடன் வைகோ உள்ளிட்டோர் கொண்டுவந்த நிவாரணப் பொருட்களை காவல்துறை பறித்துச் சென்றதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.