சட்டசபை தேர்தலில் யார் யாருக்கு சீட்? : இது தமிழக காங்கிரஸ் கலாட்டா!
சென்னை: தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைமையகமான சத்தியமூர்த்தி பவன் பக்கம் எட்டிப்பார்த்தால் எத்தனை கோஷ்டி என்று எண்ணி முடிப்பதற்குள் மூச்சு வாங்கும். ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் முதல் ப.சிதம்பரம், தங்கபாலு என பல கோஷ்டி தலைவர்களும் நவகிரக நாயகர்களாய் ஆளுக்கு ஒரு பக்கமாய் முறுக்கிக் கொண்டு நிற்பார்கள்.
சட்டசபைத் தேர்தலில் திமுக உடன் கூட்டணி சேர்ந்திருப்பதால் சில தொகுதிகளிலாவது ஜெயிப்பது உறுதி என்று நம்பும் காங்கிரஸ் கட்சித்தலைவர்கள் தங்களுடைய ஆதரவாளர்களை சட்டசபைக்கு அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
அதிமுகவில் தலைமை சொல்பவர்களுக்கு மட்டுமே சீட் என்பது உறுதியாகிவிட்டது. திமுகவில் குடும்ப கோட்டா சிஸ்டப்படி சீட் ஒதுக்கப்படுகிறது. ஆனால் காங்கிரஸ் கட்சியிலோ கோஷ்டி ஆதரவாளர்களுக்கு சீட் என்ற குழப்பம் ஆரம்பித்து விட்டது.

தொகுதி பங்கீடு
சட்டசபைத் தேர்தல் மே 16ம் தேதி நடைபெற உள்ளது. கொளுத்தி எடுக்கும் அக்னி நட்சத்திர காலம் என்றாலும், இப்போதே அரசியலில் அனலடிக்கிறது. திமுக உடன் தேர்தல் கூட்டணி அமைத்துள்ளது காங்கிரஸ் கட்சி. தொகுதி பங்கீடு பற்றிப் பேசுவதற்காக அக்கட்சித் தலைவர் இளங்கோவன் தலைமையில் எட்டு பேர் கொண்ட குழு, கடந்த திங்கள் கிழமை நியமிக்கப்பட்டது.

ராகுல்காந்தி கறார்
இதில், கே.வி.தங்கபாலு, கிருஷ்ணசாமி, யசோதா உள்ளிட்ட எட்டு பேர் இடம்பெற்றனர். இளங்கோவனின் தலைமையை ஏற்காத சிதம்பரம், மல்லிகார்ஜுன கார்கே, குலாம்நபி ஆசாத் போன்ற சீனியர் தலைவர்கள் தலைமை ஏற்றால், அந்தக் குழுவில் நான் இடம்பெறுவேன் என்று கூறினாராம். அதே நேரத்தில் இந்த தேர்தலை இளங்கோவன் தலைமையில்தான் சந்திக்க வேண்டும் என்று கட் அன்ட் ரைட் ஆக சொல்லிவிட்டாராம் ராகுல்காந்தி.

களை கட்டிய மோதல்
கடந்த வாரமே காங்கிரஸ் கட்சியில் கோஷ்டி மோதல் களை கட்டி விட்டது. சைதாப்பேட்டை வட்டார காங்கிரஸ் ஆலோசனைக் கூட்டம், மேற்கு மாம்பலத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடந்த போது ப.சிதம்பரம் கோஷ்டியினரும், ஈவிகேஎஸ் இளங்கோவன் கோஷ்டியினரும் மோதிக்கொண்டனர். இது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

ரகசிய பேச்சுவார்த்தை
சட்டசபை தேர்தலுக்கான கூட்டணி பேச்சுவார்த்தை ஒரு பக்கம் நடக்க கடந்த இரு தினங்களுக்கு முன்னர் நுங்கம்பாக்கத்தில் உள்ள ப.சிதம்பரம் வீட்டில், கே.வி. தங்கபாலு, கிருஷ்ணசாமி ஆகியோர் சந்தித்து பேசியுள்ளனர். இதுவும் ஒரு பக்கம் பரபரப்பை கிளப்பியது.

ப.சி ஆதரவாளர்கள் சந்திப்பு
முன்னாள் எம்.பியான கே.எஸ்.அழகிரி, வள்ளல் பெருமான், கராத்தே தியாகராஜன், முன்னாள் எம்.பி சுந்தரம், திருச்சி முன்னாள் மேயர் சுஜாதா ஆகியோரும் ப. சிதம்பரத்திடம் பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது. அப்போது, இந்தத் தேர்தலில் எப்படியாவது தனது ஆதரவாளர்கள் அனைவருக்கும் சீட் வாங்கிக் கொடுப்பேன்' என ப.சி உறுதியளித்தாராம்.

சீட் கிடைக்குமா?
அதே நேரத்தில் ப.சி ஆதரவாளர்கள் ஒருவருக்கு கூட சீட் கிடைக்காது என்கின்றனர் சில காங்கிரசார். ப.சி ஆதரவாளர்கள் பலரும் விருப்பமனு கொடுக்கவில்லை. நேர்காணலில் பங்கேற்க வில்லை. சிலரோ சத்தியமூர்த்தி பவன் பக்கம் எட்டி கூட பார்ப்பதில்லையாம். இவர்களுக்கு தலைவர் ஈ.வி.கே.எஸ். என்றாலே வெறுப்புதானாம்.

இளங்கோவன் ஆதரவாளர்கள் குற்றச்சாட்டு
தங்கபாலு, கிருஷ்ணசாமி ஆதரவாளர்களும் பவன் பக்கமே வருவதில்லை. இன்றைக்கு பதவி, சீட் என்று வந்ததும் கோஷ்டியாக கிளம்பி விட்டனர். இவர்களுக்கெல்லாம் ராகுல் தெளிவாக பதில் கூறிவிட்டார். இதற்கும் மேல், ரகசிய கூட்டம், ஆதரவாளர்களுடன் பேச்சு என வதந்தியைக் கிளப்பி விடும் வேலையைச் செய்வது கார்த்தி சிதம்பரம்தான் என்பதும் ஈவிகேஎஸ் ஆதரவாளர்களின் குற்றச்சாட்டு.

களத்தில் நின்றவர்களுக்கு சீட்
கடந்த முறை தி.மு.க அணியில் 63 இடங்கள் ஒதுக்கப்பட்டது. இந்தமுறை அந்த அளவிற்கு சீட் ஒதுக்காவிட்டாலும் 40 சீட்கள் வரை தி.மு.க தலைமை ஒதுக்கும் என்பது காங்கிரசாரின் நம்பிக்கை. அவை அத்தனையும் கட்சிக்காக போராடியவர்களுக்கு மட்டுமே ஒதுக்கப்படும் என்றும், ரகசியக் கூட்டம் போடுபவர்களுக்கு சீட் கிடைக்காது என்றும் ப.சி ஆதரவாளர்கள் மத்தியில் சிலர் பீதியை கிளப்புகின்றனர்.

கோட்டா சிஸ்டம் இல்லை
கட்சிக்காக உழைத்த மாவட்ட, வட்டார காங்கிரஸ் தலைவர்களுக்கு சீட் வழங்கும் முடிவில் மாநிலத் தலைமை இருக்கிறது. இதில், எந்த மாற்றமும் இல்லை. கோட்டா சிஸ்டம், குரூப்பிஸம் போன்றவற்றிற்கும் இந்தத் தேர்தலில் இடம் இல்லை என்றும் தெரிவிக்கின்றனர் ஈ.வி.கே.எஸ் ஆதரவாளர்கள்.

ப.சி ஆதரவாளர்கள் நிலை?
கடந்த சட்டசபைத் தேர்தலின் போது தங்கபாலு காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்தார். அப்போது வேட்பாளர் பட்டியலில் கடுமையான குழப்பம் ஏற்பட்டது. தனது ஆதரவாளர்களே அதிக அளவில் இடம் பெறுமாறு பார்த்துக்கொண்டார். தனது மனைவி ஜெயந்திக்கு கூட சீட் ஒதுக்கினார் தங்கபாலு. படுதோல்வியடைந்தது காங்கிரஸ்.

கறார் கண்டிசன்
இம்முறை ஈவிகேஎஸ் இளங்கோவன் தலைமையில் தேர்தலை சந்திக்கிறது காங்கிரஸ் கட்சி. யார் யாருக்கு சீட் கிடைக்குமோ? எத்தனை பேர் வெற்றி பெற்று சட்டசபைக்குள் அடி எடுத்து வைக்கப் போகிறார்களோ? மே 19ம் தேதி தெரியும்.












Click it and Unblock the Notifications