விவசாயிகளை போல் மீனவர்களுக்கும் தனி அமைச்சகம் தேவை... மத்தியில் மன்றாடுகிறோம்... ராகுல் காந்தி
மீனவர்களுக்கு தனி அமைச்சகம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி வருகிறோம் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.
Recommended Video

கன்னியாகுமரி: விவசாயிகளுக்கென தனி அமைச்சகம் இருப்பதை போல் மீனவர்களுக்கும் தனி அமைச்சகம் அமைக்க மத்திய அரசை தங்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருவதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.
ஓகி புயலால் பாதிக்கப்பட்டுள்ள கன்னியாகுமரி மாவட்டத்தை பார்வையிட இன்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வருகை தந்தார். அப்போது காணாமல் போன மீனவர்களை எதிர்நோக்கி சின்னத்துறையில் உறவினர்களும், சக மீனவர்களும் காத்து கிடக்கின்றனர்.
அங்கு சென்ற ராகுல் காந்தி அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார். அப்போது
காணாமல் போன 400-க்கும் மேற்பட்ட மீனவர்களை கண்டுபிடித்து தருமாறு மீனவ பெண்கள் ராகுலிடம் கோரிக்கை அளித்தனர்.

ராகுல் வணக்கம்
இதையடுத்து மீனவ மக்களிடையே தமிழில் வணக்கம் என்று தொடங்கிய ராகுல் ஆங்கிலத்தில் பேசினார். அதை தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தமிழில் மொழிபெயர்த்தார்.

பிரசாரத்தில் இருந்தேன்
ராகுல் பேசுகையில், உங்களை சந்திக்க ஓகி புயல் பாதித்தபோதே வந்திருக்க வேண்டும். ஆனால் குஜராத்தில் சட்டசபை தேர்தலுக்காக சில முன்னேற்பாடு நடவடிக்கைகள் செய்ய வேண்டியிருந்ததாலும், பிரசாரத்தில் ஈடுபட்டிருந்ததாலும் என்னால் வரமுடியவில்லை.

வேதனை அளிக்கிறது
அதனால்தான் இப்போது எவ்வளவு சீக்கரம் வரமுடியுமா அவ்வளவு சீக்கிரம் வந்துள்ளேன். தாமதத்திற்கு மன்னிக்கவும். இந்த புயல் பாதிப்பு மீனவர்களுக்கும், விவசாயிகளுக்கும் பெருத்த சேதத்தை தந்துள்ளது. இதனால் பலதரப்பட்ட மக்களும் பாதிபபுக்குள்ளாகியுள்ளது வேதனை அளிக்கிறது.

மீனவ பெண்களை சந்தித்தேன்
இது மிகவும் கடிமையான சூழல். சகோதரர்கள், தந்தை, கணவன்மார்கள் என உறவுகளை காணாமல் தவித்து வரும் மீனவ பெண்களை சந்தித்தேன். மீனவர்களின் பிரச்சினைக்காக காங்கிரஸ் கட்சி நாடாளுமன்றத்தில் எப்போதும் குரல் கொடுக்கும்.

ஓங்கி ஒலிப்போம்
நாங்கள் மத்தியிலும், தமிழகத்திலும் ஆட்சியில் இல்லாவிட்டாலும் மிக வலிமையான எதிர்க்கட்சியாக எங்களது குரலை நாடாளுமன்றத்தில் ஓங்கி ஒலித்து வருகிறோம். விவசாயிகளுக்கு தனி அமைச்சகம் உள்ளது. அதுபோல் மீனவர்களுக்கும் தனி அமைச்சக அமைக்க கோரிக்கை விடுத்து வருகிறோம்.

நாடாளுமன்றத்தில் எழுப்புவோம்
அவ்வாறு தனி அமைச்சகம் இருந்தாலும் உங்களது கோரிக்கைகளை அந்த அமைச்சகத்திடம் கூறலாம். காணாமல் போன மீனவர்கள் விவகாரத்தை நாடாளுமன்றத்தில் எழுப்பி எங்களால் இயன்ற அளவு நீதி கிடைக்க பாடுபடுவோம் என்றார் ராகுல் காந்தி.












Click it and Unblock the Notifications