ராகுல் காந்தியின் "நான்சென்ஸ்" சீற்றத்தால் பதவியை பறிகொடுத்த ஜெயலலிதா!!
சென்னை: தமிழக முதல்வராக பதவி வகித்த ஜெயலலிதா, சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறைத் தண்டனை பெற்றதால் உடனே தமது எம்.எல்.ஏ. பதவி மற்றும் முதல்வர் பதவியை பறிகொடுப்பதற்கு காரணம் தீர்ப்பு மட்டுமல்ல.. கடந்த ஆண்டு காங்கிரஸ் தலைவர் ராகுலுக்கு வந்த கோபமே முதன்மை காரணமும்...
நாட்டின் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 8-ம் பிரிவில், லஞ்ச, ஊழல் குற்றங்கள் உள்ளிட்ட குற்றங்களுக்காக நீதிமன்றத்தால் குறைந்தபட்சம் அபராதம் விதிக்கப்பட்டிருந்தால்கூட 6 ஆண்டுகளுக்கு ஒருவர் தேர்தலில் போட்டியிட முடியாது. சிறை தண்டனை விதிக்கப்பட்டால், அந்த தண்டனையை முடித்த பின்னர் அடுத்த 6 ஆண்டுகள் கழிந்த பிறகுதான் தேர்தலில் போட்டியிட தகுதி ஏற்படும். மற்ற அனைத்து சட்டப்பிரிவுகளின் கீழ் நீதிமன்றத்தால், 2 ஆண்டுகளோ அல்லது அதற்கும் மேலாகவோ தண்டனை விதிக்கப்பட்டால், தேர்தலில் போட்டியிடும் தகுதியை வேட்பாளர் இழப்பார் என்கிறது.
ஆனால் மக்கள் பிரதிநிதித்துவ சட்ட பிரிவு 8(4) ன்படி, 2 ஆண்டுகளோ அதற்கு அதிகமாகவோ சிறை தண்டனை பெற்றவர்கள், மேல் முறையீடு செய்யும் அவகாசம் வரையிலோ அல்லது மேல் முறையீடு செய்தால் இறுதி தீர்ப்பு வரும் வரையிலோ மக்கள் பிரதிநிதிகளான எம்.பி.க்கள், எம்.எல்.ஏக்கள். பதவியில் தொடர முடியும் என்கிறது.

வழக்கு
இதனால் பல அரசியல்வாதிகள் எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ. பதவிகளில் நீடித்தனர். ஈந்த 8(4) பிரிவை ரத்து செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடரப்பட்டது.

உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் அதிரடியாக 8(4)-வது பிரிவை ரத்து செய்து கடந்த ஆண்டு ஜூலை மாதம் 10-ந் தேதி உத்தரவிட்டது. இது பல அரசியல்வாதிகள் வயிற்றில் புளியைக் கரைத்தது.

காங்கிரஸ் அரசு திருத்தம்..
இதனால் உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவை செல்லுபடியாகாமல் செய்திட சட்டத்திருத்தம் கொண்டுவர முடிவு செய்து நாடாளுமன்றத்தில் 'மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் (இரண்டாம் திருத்தம்) மசோதா 2013' ராஜ்யசபாவில் கொண்டு வரப்பட்டது. ஆனால் இம் மசோதா நிறைவேறவில்லை.

அவசர சட்டம்
இதனால், மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் திருத்தங்களை ஜனாதிபதி ஒப்புதலுடன் அவசர சட்டமாக நிறைவேற்றி கிரிமினல் எம்.பி. எம்.எல்.ஏக்களை காப்பாற்ற கடந்த காங்கிரஸ் அரசு முயற்சித்தது.

கடுப்பான ராகுல்
இதில் கடுப்பாகிப் போன காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, இந்த அவசர சட்டத்தை நான்சென்ஸ் என்று விமர்சித்த கையோடு, இதை குப்பையில் கிழித்து போடுங்கள் என்று டெல்லியில் செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தி சீறினார். இது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

வாபஸ் ஆன அவசர சட்டம்
அப்போது, நாட்டின் பிரதமராக இருந்த மன்மோகன்சிங் வெளிநாட்டில் இருந்தார். அதன் பின்னர் அவர் நாடு திரும்பிய உடன் இந்த அவசர சட்டம் வாபஸ் பெறப்பட்டுவிட்டது.

ஜெ. பதவி தப்பியிருக்கும்
அன்று மட்டும் ராகுல் காந்தி கோபப்படாமல் இருந்திருந்தால் காங்கிரஸ் அரசின் அவசர சட்டத்துக்கு ஜனாதிபதி ஒப்புதல் கொடுத்திருப்பார்.
என்னதான் சிறை தண்டனை விதிக்கப்பட்டாலும் எம்.எல்.ஏவாக, முதல்வராக ஜெயலலிதா பதவியில் நீடித்திருப்பார்.












Click it and Unblock the Notifications