நாளையும் ஜெயா டி.வி சி.இ.ஓ, விவேக் வீட்டில் ரெய்டு தொடரும் - ஐ.டி அதிகாரிகள் தகவல்
விவேக் ஜெயராமன் வீட்டில் இரவும், நாளையும் சோதனை தொடரும் என்று அதிகாரிகள் தகவல் தெரிவித்து உள்ளனர்.
சென்னை: ஜெயா டி.வி தலைமை செயல் அதிகாரி விவேக் ஜெயராமன் வீட்டில் நாளையும் சோதனை தொடரும் என்று ஐ.டி அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
இன்று காலையில் இருந்து வருமான வரித்துறை அதிகாரிகள் சசிகலா மற்றும் தினகரன் உறவினர்கள், நண்பர்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் திடீர் சோதனை நடத்தினர். 150க்கும் மேற்பட்ட இடங்களில் 1800க்கும் அதிகமான அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இதில் திவாகரன், இளவரசி, விவேக் ஆகியோரது வீடுகளும் அலுவலகங்களும் அடங்கும். சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள ஜெயா டிவி அலுவலகத்திலும் காலை முதல் சோதனை நடத்தி வருகிறார்கள் வருமான வரித்துறை அதிகாரிகள்.
ஜெயா டிவி தலைமை செயல் அதிகாரியும், இளவரசியும் மகனுமான விவேக் ஜெயராமனுக்கு சொந்தமான வீடு கோடம்பாக்கம் மகாலிங்கபுரத்தில் உள்ளது. அங்கும் காலை முதல் அதிகாரிகள் சோதனையிட்டு வருகிறார்கள். இன்னும் சோதனை முடியவில்லை என்றும், இரவு மற்றும் நாளையும் சோதனை தொடர்ந்து நடைபெறப்போவதாக அவர்கள் தெரிவித்தனர்.