ரயில் டிக்கெட் ரிசர்வேசனில் முறைகேடு: ரெய்டு வந்த சிபிஐ அதிகாரிகளுக்கு அடி - மாஜி எஸ்.ஐ கைது
சென்னை: ரயில் டிக்கெட் ரிசர்வேசனில் மோசடி செய்வதாக எழுந்த புகாரை அடுத்து சென்னையில் ரெய்டுக்கு நடத்த வந்த, பெங்களூரு சிபிஐ அதிகாரிகள் தாக்கப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக, ஓய்வுபெற்ற, சப்-இன்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்டு உள்ளார்.
ரயில்வே பயணச்சீட்டு, இந்திய ரயில்வே, சுற்றுலா வளர்ச்சிக் கழக (ஐ.ஆர்.சி.டி.சி.) இணையதளம் மூலம் விற்கப்படுகிறது. இந்த இணையதளத்தில் பயணிகள், குறிப்பிட்ட அளவே பயணச்சீட்டு பதிவு செய்ய முடியும். ஆனால் அண்மைக்காலமாக சிலர், இந்த இணையதளத்தை தங்களது கணினியில் உள்ள அதிநவீன மென்பொருளைப் பயன்படுத்தி "ஹேக்' செய்து, ஒரே நேரத்தில் 36 பயணச்சீட்டுகள் வரை பதிவு செய்து வருவதாகப் புகார் கூறப்பட்டது.
இந்த வகை முறைகேட்டில் தரகர்களும், சில வியாபாரிகளும் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பொதுமக்களுக்கு பயணச்சீட்டு கிடைப்பதில் பெரும் சிரமம் ஏற்பட்டது. இது குறித்து சிபிஐ வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டுள்ளது. இது தொடர்பாக டெல்லியில் ஐ.ஆர்.சி.டி.சி. உதவி மேலாளர் சாகிப் என்பவரை சி.பி.ஐ. அதிகாரிகள் புதன்கிழமை கைது செய்தனர்.

11 இடங்களில் சோதனை
டிக்கெட் முன்பதிவு முறைகேடு தொடர்பாக டெல்லி, கொல்கத்தா,பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் 11 இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். இங்கு முறைகேடாக ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளத்தில் பயணச்சீட்டு பதிவு செய்ததற்கான தடயங்களையும், ஆதாரங்களையும் சிபிஐ அதிகாரிகள் சேகரித்தனர்.

சென்னையில் ரெய்டு
இந்த நிலையில், சென்னை அண்ணாநகர் இரண்டாவது அவென்யூவில் ஒரு வணிக கட்டடத்தில் உள்ள ரியல் எஸ்டேட் அலுவலகத்தில் சோதனை செய்ய பெங்களூருவில் இருந்து சிபிஐ அதிகாரிகள் ஆய்வாளர் ரஞ்சித் தலைமையில் சென்றனர். இதைப் பார்த்த அந்த ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் உரிமையாளர் ஸ்டாலின், சிபிஐ அதிகாரிகளைப் பார்த்ததும் தப்பியோடினார்.

அதிகாரிகள் மீது தாக்குதல்
சிறிது நேரத்துக்குப் பின்னர் அங்கு வந்த ஸ்டாலின், தன்னுடன் 5 பேரை அழைத்து வந்தார். அப்போது அங்கிருந்த சிபிஐ அதிகாரிகளிடம், ஸ்டாலினும், அவர்களுடன் வந்தவர்களும் தகராறு செய்தனர். தகராறு முற்றவே ஸ்டாலின் தரப்பினர், சிபிஐ அதிகாரிகளைத் கடுமையாகத் தாக்கினர். பின்னர் அவர்களை அலுவலகத்தில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியே தள்ளி விட்டனர்.

அலுவலகத்திற்கு பூட்டு
மேலும் அலுவலகத்துக்குள் சிபிஐ அதிகாரிகள் மீண்டும் நுழைந்து விடாதவகையில் ஸ்டாலின் தரப்பினர் அலுவலகத்தை பூட்டிவிட்டுச் சென்றனர். இதைப் பார்த்து அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து சிபிஐ ஆய்வாளர் ரமேஷ், அண்ணாநகர் காவல் நிலையத்தில் ஸ்டாலின், அவரது தந்தை ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர் திரவியம் (65) உள்ளிட்ட 6 பேர் தங்களை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்து, பணி செய்யவிடாமல் தடுத்ததாகப் புகார் செய்தனர்.

திரவியம் கைது
புகாரின் அடிப்படையில் 4 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீஸார் திரவியத்தை வியாழக்கிழமை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக இருக்கும் ஸ்டாலின் உள்ளிட்ட 5 பேரை தேடி வருகின்றனர்.

போலீஸ் பாதுகாப்புடன் சோதனை
இதற்கிடையே வியாழக்கிழமை சென்னை போலீஸ் பாதுகாப்புடன் சிபிஐ அதிகாரிகள் ஸ்டாலின் அலுவலகத்தில் காலை 11.30 மணியில் இருந்து நண்பகல் 1.30 மணி வரை சுமார் 2 மணி நேரம் அதிரடி சோதனை நடத்தினர். இச் சோதனையில் ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளத்தில் முறைகேடு செய்து பயணச்சீட்டு பெற்றதற்கான தடையங்களையும், ஆதாரங்களையும் சிபிஐ அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.












Click it and Unblock the Notifications