தமிழகத்தில் பல இடங்களில் மிதமான மழை.. சென்னையில் கிண்டி, தி.நகர், அசோக் நகர் பகுதிகளில் கனமழை
சென்னை: சென்னையில் கிண்டி, தி.நகர், அசோக் நகர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. அதேபோல் ஈரோடு, சத்தியமங்கலம் ஆகிய பகுதிகளிலும் நல்ல மழை பெய்து வருகிறது.
தென்மேற்கு வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வுநிலை, சற்று மேற்கு நோக்கி நகர்ந்து, மன்னார் வளைகுடா முதல் வட தமிழக கடற்கரை வரை நிலவுகிறது.
இதன் காரணமாக, அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடலோர மாவட்டங்களில் அனேக இடங்களிலும், உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், சென்னையில் மாலை முதலே பல இடங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. கிண்டி, தி.நகர், அசோக் நகர் உள்ளிட்ட இடங்களிலும் கன மழை பெய்து வருகிறது. காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது.
ஈரோடு மாவட்டம் அந்தியூர், பவானியில் ஒரு மணி நேரமாக கனமழை கொட்டி வருகிறது. சத்தியமங்கலம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது.
இதேபோல் விருதுநகர், திருவள்ளூர், வேலூர், விழுப்புரம், திருவாரூர், தஞ்சாவூர், திண்டுக்கல், திருவண்ணாமலை, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட பல பகுதிகளிலும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்து வருகிறது.