அடித்து ஊற்றுகிறது கன மழை.. சென்னையில் பல இடங்களில் பலத்த மழை.. #சென்னை
சென்னையிலும், புறநகர்களிலும் இன்று மதியத்திற்கு மேல் பரவலாக நல்ல மழை பெய்தது. தொடர்ந்து மழை அடித்து ஊற்றிக் கொண்டிருக்கிறது.
சென்னை: சென்னையிலும் புறநகர்ப் பகுதிகளிலும் பரவலாக கன மழை பெய்து வருகிறது. பல பகுதிகளில் சூறைக் காற்றுடன் மழை கொட்டியது. புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலை ஏற்படும் வாய்ப்பு அதிகரித்திருப்பதால் இந்த மழை கொட்டி வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புறநகர்கள் பலவற்றிலும் மாலை முதல் விடாமல் மழை பலமாக பெய்து வருகிறது. தொடர்ந்து பெய்து வரும் மழையால் நகரமே குளிர்ந்து நடுங்கிக் கொண்டிருக்கிறது. இந்தஆண்டு வட கிழக்குப் பருவ மழை சீசனில் நேற்று முதல்தான் சென்னை மற்றும் தமிழகத்தில் நல்ல மழை பெய்து வருகிறது என்பதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இந்த மழை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தொடரும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக இன்று காலைக்கு மேல் சென்னையிலும், புறநகர்களிலும் விட்டு விட்டு லேசான மழை பெய்து வந்தது. மாலையில் புறநகர்கள் பலவற்றில் மழை வெளுத்து வாங்கியது.
பெரிய அளவில் காற்று இல்லாமல் முதலில் விட்டு விட்டு மழை பெய்தது. ஆனால் போகப் போக சூறைக் காற்றுடன் பல இடங்களில் மழை கொட்டியது.
தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம், சேலையூர், சோழிங்கநல்லூர், கிண்டி, சைதாப்பேட்டை, கோயம்பேடு, அடையாறு, ஈக்காட்டுத்தாங்கல் உள்ளிட்ட பல பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது. நிறுத்தி நிதானமாக மழை பெய்வதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சில இடங்களில் இடியுடன் மழை பெய்தது. கடலோர மாவட்டங்களில் பலத்த காற்று வீசுவதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதேபோல தமிழகத்தின் பல பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. புதுக்கோட்டையில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் பெய்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
புதுச்சேரியில் பலத்த காற்று வீசியதுடன் கடல் சீற்றமும் காணப்பட்டடது. பொம்மையார்பாளையம் மீனவ கிராமத்தில் கடல்நீர் புகுந்ததால் இரண்டு வீடுகள் சேதமடைந்ததுடன் படகு ஒன்று கடலுக்குள் அடித்து செல்லப்பட்டது. தொடர்ந்து கடலோர மாவட்டங்கள் பலவற்றிலும் மழை பெய்து வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பேய் மழையாக இல்லாமல் நிறுத்தி நிதானமாக பெய்து வருவதால் மழையை மக்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்பதையும் காண முடிகிறது.












Click it and Unblock the Notifications