தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை...கடலோரங்களில் பலத்த மழை - வானிலை மையம்
தமிழகத்தில் இன்னும் 3 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
சென்னை: தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
அக்டோபர் 30ஆம் தேதி முதல் வடகிழக்குப் பருவமழை தொடங்கியது. சென்னையில் வெளுத்து வாங்கியது மழை. காவிரி டெல்டாவில் குறிப்பாக கடைமடை பகுதியில் உள்ள நாகையில் தட்டி எடுத்தது. வெள்ளக்காடாக மாறியுள்ளன டெல்டா மாவட்டங்கள். வயல்களில் படகுகள் ஓடுகின்றன.
சென்னை புறநகர் பகுதிகள் வெள்ளக்காடாக மாறின. கடந்த இரு தினகங்களாக சற்றே ரெஸ்ட் எடுத்த மழை மீண்டும் தொடங்கியுள்ளது. இந்த நிலையில் 3 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பாலச்சந்திரன், தென் கிழக்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் சற்றே நகர்ந்து தென்மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டுள்ளது. இதனால் நவம்பர் 12ஆம் தேதிவரை கடலோர மாவட்டங்கள், புதுச்சேரியில் பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறினார்.
தமிழகத்தின் உள் மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்றும் பாலச்சந்திரன் தெரிவித்தார். கடந்த 24 மணி நேரத்தில் தக்கலையில் 5 செமீ மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.