கரையைக் கடந்தது ரமணன் "புயல்".. "சோகமூட்டத்துடன்" காணப்படும் குழந்தைகள் மனம்...!
சென்னை: வானிலை ஆய்வு மைய இயக்குநர் ரமணன் தனது பதவியில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார் என்பதைக் குறிப்பிடும் வகையில், வாட்ஸ் அப்பில் ஜோக் ஒன்று உலா வருகிறது.
சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநராக பணியாற்றியவர் எஸ்.ஆர். ரமணன். கொட்டும் மழை என்றாலும் சரி, கொளுத்தும் வெயில் என்றாலும் சரி மக்களின் நினைவுக்கு உடனடியாக வருபவர் ரமணன் தான்.
வானிலை அறிக்கை என்ன என்பதைக்கூட பலர், ‘ரமணன் இன்னைக்கு என்ன சொல்லி இருக்கார்?' என்றே கேட்கும் அளவிற்கு மழையோடும், வெயிலோடும் பின்னிப் பிணைந்தவர் ரமணன்.
வெளியில் மழை வருதா என்று பார்த்ததை விட டிவில் ரமணன் வந்துட்டாரா என்று பார்த்தவர்களே அதிகம்.
மழை வரும் எனக்கூறி பள்ளிகளின் விடுமுறைக்கு காரணமாக அமைந்த ரமணனை, பள்ளிக் குழந்தைகள் கொண்டாடினர். மீம்ஸ்கள் மூலமாக இணையத்தில் பிரபலமாக வளைய வந்தவர் ரமணன்.
இந்தச் சூழ்நிலையில், நேற்று மாலை தனது பணியில் இருந்து ரமணன் ஓய்வு பெற்றார். இதனையும் வழக்கம்போல், அவரது ரசிகர்கள் அவரது ஸ்டைலிலேயே வானிலை அறிக்கை போல் நகைச்சுவையாகக் கூறியுள்ளனர்.
இது தொடர்பாக வாட்ஸ் அப்பில் மெசேஜ் ஒன்று வலம் வருகிறது. அதில், ‘சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் ரமணன் ஓய்வு. மழையே வரலைனாலும் லீவுவுட்டு அழகு பார்ப்பீயே தெய்வமே உனக்கே லீவா' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், மற்றொரு மெசேஜில், ‘இன்னும் சில மணி நேரத்தில் ரமணனின் பணி கரையைக் கடக்கிறது. தமிழகத்தை பொருத்தவரை மாணவர்கள் லேசான வருத்தமும், பெற்றோர்கள் தீவிர சந்தோசத்துடனும் இருக்க வாய்ப்பு உள்ளது.
குழந்தைகள் மனம் சோகமூட்டத்துடன் காணப்படும். அடுத்த இயக்குநர் மக்கள் மனதில் நிலை கொள்ளும் வரை இதே நிலை நீடிக்கும்' என இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.