சென்னையின் பல பகுதிகளில் மீண்டும் கன மழை.. விமான நிலையத்தில் ஆலங்கட்டி மழை
சென்னை: சென்னையில் நேற்று மாலையில் வெளுத்துக் கட்டிய கன மழையைத் தொடர்ந்து இன்றும் ஒரு நல்ல மழை சென்னையின் பல பகுதிகளை நனைத்தது
சென்னை நகரிலும், புறநகர்களிலும், திருவள்ளூரிலும் நேற்று மாலையில் மிக பலத்த காற்றுடன் சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக பலத்த மழை கொட்டித் தீர்த்தது.
வெயிலில் வெந்து தவித்த மக்களுக்கு இந்த மழை பெரும் நிம்மதியைக் கொடுத்தது. வெப்பச் சலனத்தால் வந்த இந்த மழையால் நகரின் பல பகுதிகளிலும் மரங்கள் முறிந்து விழுந்தன. போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
புறநகர்களில் நேற்று பல பகுதிகளில் மின்விநியோகமும் துண்டிக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று மாலையிலும் அதேபோன்று மாலை 4 மணியளவில் நகரின் பல பகுதிகளிலும் புறநகர்ப் பகுதிகள் பலவற்றிலும் மழை கொட்டியது.

பிரதமர் மோடி வந்த நிலையில் விமான நிலையம் அமைந்துள்ள மீனம்பாக்கம், பல மாடிக் கட்டடம் இடிந்து விழுந்த இடமான மவுலிவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது. சில இடங்களில் ஆலங்கட்டி மழையும் பெய்துள்ளது.
இதேபோல கீழ்ப்பாக்கம், வில்லிவாக்கம், அண்ணாநகர் ஆகிய இடங்களில் பலத்த மழை கொட்டித் தீர்த்தது. அம்பத்தூர் சுற்று வட்டாரங்களில் பெய்யும் பலத்த மழையால் சாலைகளில் வெள்ளம் ஓடியது.
அதேசமயம், நேற்று மழை வெளுத்துக்கட்டிய குரோம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் இன்று வெறும் காற்றும், கருமேகமும் மட்டுமே மிஞ்சியது.












Click it and Unblock the Notifications