மிதமான மழை பெய்யும்... குடை, ரெயின்கோட் அவசியம் மக்களே- தமிழ்நாடு வெதர்மேன்
நான்கு நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதால் குடை, ரெயின்கோட்டுடன் வெளியே செல்லுங்கள் என்று எச்சரித்துள்ளார் தமிழ்நாடு வெதர்மேன்.
சென்னை: தென் தமிழகம், வட கடலோர மாவட்டங்களில் நான்கு நாட்களுக்கு மழை பெய்யும் என தமிழ்நாடு வெதர்மேன் தனது முகநூல் பக்கத்தில் எச்சரித்துள்ளார்.
வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் இறுதியில் தொடங்கியது. கொட்டித்தீர்த்த மழை சற்றே ஓய்வெடுத்ததால் தாழ்வான பகுதிகளில் தேங்கிய வெள்ளநீர் வடிந்து புறநகர்வாசிகள் இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றனர்.
கடந்த சில தினங்களாக வானம் தெளிவாக காணப்பட்டது. சூரியன் சுள்ளென சுட்டதால் ஆடைகளை துவைத்து காயவைத்துக்கொண்டனர் சென்னைவாசிகள்.
அரைமணிநேரம் கொட்டிய மழை
சென்னைவாசிகளை இன்று அதிகாலையில் திடீர் மழை நனைத்தது. மந்தைவெளி, மயிலாப்பூர் பட்டினப்பாக்கத்தில் அரைமணிநேரம் மழை பெய்தது. இதனால் கார்த்திகை மாதம் கோவிலுக்கு சென்றவர்களும், கடற்கரையோரங்களில் நடைபயிற்சிக்கு சென்றவர்களும் நனைய நேரிட்டது. மழைபெய்த சிறிது நேரத்தில் சூரியன் தலைகாட்டியது
வெதர்மேன் எச்சரிக்கை
இதனிடையே தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்களுக்கு மழை பெய்யும் எனத் தமிழ்நாடு வெதர் மேன் பிரதீப் ஜான் நேற்று தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
கிழக்குதிசையில் இருந்து வீசும் காற்றின் காரணமாக அடுத்த 3 முதல் 4 நாட்களுக்குத் தென் தமிழகம், கடற்கரைப்பகுதிகள், சென்னை உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும்.
ரெயின்கோட் அவசியம்
மக்கள் வெளியே செல்லும் போது குடை ரெயின்கோட் உள்ளிட்டவற்றை எடுத்துச் செல்வது அவசியம். கொளுத்தும் வெயிலுக்கு இடையே எப்போது வேண்டுமானாலும் மழை பெய்யக்கூடும்.
தென் தமிழகத்தில் மழை
இந்த முறை டெல்டா பகுதிகளான நாகை, திருவாரூர், தஞ்சை, காரைக்கால், பெரம்பலூர், அரியலூர், தென் தமிழகத்திலும், திருச்சி, நாமக்கல் மாவட்டங்களிலும் அடுத்த நான்கு நாட்கள் வரை மழை இருக்கும்.மேற்கு மாவட்டங்களான கோவை, ஈரோடு மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் மிதமான மழை இருக்கும்.
மிதமான மழை
வடகடலோர மாவட்டங்களான சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர் ஆகிய பகுதிகளிலும் மழை இருக்கும். வடக்கு உள்மாவட்டங்களான வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் பகுதிகளிலும் ஓரிருமுறை மழை இருக்கும்.
வெள்ளம் வர வாய்ப்பு இல்லை
வடகிழக்கு பருவமழை இந்த மாத இறுதியில் இருந்து மீண்டும் தீவிரம் அடைந்துவிடும். இந்த மாதத்தின் கடைசி நாட்களும், டிசம்பர் மாதத்தின் முதற்பாதியும் மழையோடு இருக்கப் போகிறோம். மிதமான மழை மட்டுமே இருக்குமே என்பதால், வெள்ளத்துக்கு வாய்ப்புகள் இல்லை என்று பதிவிட்டுள்ளார் பிரதீப் ஜான்.