இதற்குதானே வந்தாரா விக்ரம் பத்ரா.... மத்திய பாஜக அரசின் திட்டமிட்ட நாடகம் அரங்கேற்றம்?
ஆர்கே நகர் தொகுதிக்கான சிறப்பு தேர்தல் அதிகாரியாக விக்ரம் பத்ரா நியமிக்கப்பட்டது பல்வேறு சந்தேகங்களை கிளப்பியுள்ளது.
சென்னை: தமிழக தேர்தல் வரலாற்றில் முதல் முறையாக சிறப்பு தேர்தல் அதிகாரியாக விக்ரம் பத்ரா நியமிக்கப்பட்டதே அரசியல் காரணங்களுக்காதானா என்கிற சந்தேகம் எழுந்துள்ளது.
தமிழக தலைமை தேர்தல் அதிகாரியால ராஜேஷ் லக்கானி இருந்து வருகிறார். ஆர்கே நகர் தொகுதி இடைத் தேர்தலில் முறைகேடுகள் நடைபெறாத வகையில் ஏராளமான மைக்ரோ பார்வையாளர்களையும் தேர்தல் ஆணையம் நியமித்த்துள்ளது.
அத்துடன் இதுவரை இல்லாதவகையில் ராஜேஷ் லக்கானிக்கு இணையான அதிகாரம் கொண்டவராக விக்ரம் பத்ரா என்ற சிறப்பு தேர்தல் அதிகாரியும் நியமிக்கப்பட்டுள்ளார். ராஜேஷ் லக்கானி அறையில் அமர்ந்து கொண்டு இவர் சிறப்பு அதிகாரியாக செயல்படுவார் எனவும் அறிவிக்கப்பட்டது.

அதிரடி சோதனைகள்
விக்ரம் பத்ரா வருகைக்குப் பின்னர் ஆர்கே நகர் இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா நடக்கிறது என்பதை முன்வைத்து அதிரடியாக வருமான வரி சோதனைகள் நடத்தப்பட்டன. இந்த சோதனைகளில்தான் ரூ89 கோடிக்கு பண பட்டுவாடா நடந்துள்ள ஆவணங்கள் சிக்கின.

டெல்லி பயணம்
இப்போது விக்ரம் பத்ரா, இதனை அடிப்படையாக வைத்து அறிக்கை ஒன்றை தயார் செய்து டெல்லி விரைந்துள்ளார். அங்கு தலைமை தேர்தல் ஆணைய அதிகாரிகளுடன் விக்ரம் பத்ரா அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.

தினகரனின் பேராசை
அனேகமாக ஆர்கே நகர் தொகுதி இடைத் தேர்தல் ரத்தாக கூடிய வாய்ப்புகள் இருப்பதாகவே கூறப்படுகிறது. சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோர் அதிமுக மற்றும் ஆட்சியை கைப்பற்றிவிடக் கூடாது என்பதில் மத்திய அரசு முனைப்புடன் இருந்து வருகிறது. இவர்களில் சசிகலா சிறைக்குப் போய்விட்டார். தினகரன் மீதான ஃபெரா வழக்குகள் நிலுவையில் உள்ளன. டிடிவி தினகரன் எப்படியும் ஆர்கே நகரில் வென்று முதல்வர் நாற்காலியில் உட்கார முடிவு செய்துள்ளார். இதற்காகவே ஆர்கே நகரில் ரூ100 கோடி அளவுக்கு வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டுள்ளது.

தகுதி நீக்கம்?
தற்போது விஜயபாஸ்கர் வீட்டில் கிடைத்த ஆவணங்களின் அடிப்படையில் இடைத் தேர்தல் ரத்து செய்யப்படலாம் அல்லது தினகரன் தகுதி நீக்கம் செய்யப்படலாம் என்கின்றன டெல்லி வட்டாரங்கள். தினகரனை தகுதி நீக்கம் செய்வதன் மூலமே முதல்வர் நாற்காலியில் அவர் அமருவதை தடுக்க முடியும் என கருதுகிறது மத்திய அரசு.

வருகையே இதற்குதானா?
இதற்காகவே வருமான வரி சோதனை அரங்கேறியது.. இப்போது வருமானவரி சோதனை ஆவணங்களுடன் டெல்லிக்கும் புறப்பட்டு போய்விட்டார் விக்ரம் பத்ரா. ஆக விக்ரம் பத்ராவின் வருகையே இதற்குதானோ என்கிற சந்தேகத்தை உறுதி செய்வதாகவே அவரது நடவடிக்கைகள் அமைந்துள்ளன என கோட்டை வட்டாரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.












Click it and Unblock the Notifications