"ஒன்னு நாலாகட்டும்"... வேட்புமனுவைக் கொடுக்காமல் தேர்தல் அதிகாரியைக் குழப்பிய ராஜேந்திர பாலாஜி!
விருதுநகர்: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வேட்புமனு தாக்கல் செய்ய சென்றபோது மனுவை அளிக்காமல் ஒன்னு நாலாகட்டும் என்று மீண்டும் மீண்டும் கூறியது தேர்தல் அதிகாரியை குழப்பம் அடைய வைத்தது.
சட்டசபை தேர்தலில் சிவகாசி தொகுதியில் அதிமுக சார்பில் செய்தித் துறை அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி போட்டியிடுகிறார். இந்நிலையில் அதிமுக வேட்பாளர்கள் அனைவரும் வியாழக்கிழமை மதியம் 12.50 மணி முதல் 1.20 மணிக்குள் வேட்புமனுவை தாக்கல் செய்ய வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டிருந்தார்.

இதையடுத்து ராஜேந்திர பாலாஜி மதியம் 12.30 மணிக்கு வேட்புமனு தாக்கல் செய்ய சிவகாசி ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் உள்ள தேர்தல் அதிகாரியின் அறைக்குள் நுழைந்தார். அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்து அவர் தனது வேட்புமனுவை சரி பார்த்தார்.
அவர் வேட்புமனுவை சரிபார்த்த பிறகு அதை தன்னிடம் அளிக்குமாறு தேர்தல் அதிகாரி கேட்டார். அதற்கு அமைச்சரோ மனுவை அளிக்காமல் அமர்திருந்தார். தேர்தல் அதிகாரி மனுவை அளிக்குமாறு மீண்டும் மீண்டும் கேட்க அமைச்சரோ ஒன்னு நாலாகட்டும் என்று கூறினார்.
வட மாநிலத்தை சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி அமர் குஸ்வாஹாவுக்கு தமிழ் சரியாகத் தெரியாது. இதனால் அவர் மீண்டும் மனுவை கேட்க அமைச்சர் மீண்டும் ஒன்னு நாலாகட்டும் என்று கூறினார்.
இறுதியில் 1.04 மணிக்கு தான் அமைச்சர் மனுவை அளித்தார். அவர் அங்கிருந்து சென்ற பிறகு குஸ்வாஹா சக அதிகாரிகளிடம் ஒன்னு நாலுக்கு விளக்கம் கேட்டறிந்தார்.












Click it and Unblock the Notifications