ஆர்.கே.நகர் தேர்தல்.. தள்ளிப்போகுமா தமிழக பட்ஜெட்? ராஜேஷ் லக்கானி விளக்கம்
பட்ஜெட்டை தள்ளிவைப்பது என்பது பெரிய பிரச்சினை இல்லை. இருந்தாலும் இது குறித்த சந்தேகங்களை தமிழக அரசு தேர்தல் ஆணையத்திடம் விளக்கம் கேட்டு பெற்று கொள்ளலாம் என ராஜேஷ் லக்கானி தெரிவித்தார்.
சென்னை: தமிழக அரசு தாக்கல் செய்ய உள்ள பட்ஜெட்டில், ஆர்.கே. நகர் தொகுதிக்கு எந்த புதிய திட்டங்களையும் அறிவிக்க கூடாது என தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கூறியுள்ளார்.
தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா, கடந்த டிசம்பர் 5ம் தேதி மரணமடைந்தார். அவர் கடந்த தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இந்த தொகுதியில் வரும் ஏப்ரல் 12ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது. இதற்கான வேட்பு மனு தாக்கல் வரும் 16ம் தேதி துவங்குகிறது.
இந்நிலையில், தமிழக அரசின் 2017-18ம் ஆண்டுக்கான பட்ஜெட் வரும் 16ம் தேதி தாக்கல் செய்யப்படும் என்று தமிழக அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது, பொதுவாக தேர்தல் அறிவித்த பிறகு நடத்தை விதிகள் உடனே அமலுக்கு வரும். எந்த புதிய திட்டங்களும் தொடங்க கூடாது.
பல்வேறு அரசியல் திருப்பங்களுக்கு இடையே நடைபெற உள்ள ஆர்.கே.நகர் தேர்தல் மிகுந்த மிக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுவதால், இதனை கருத்தில் கொண்டு இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் எனவும், புதிய அறிவிப்புகள் வெளிவர வாய்ப்புள்ளது எனவும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.
அதனால், பட்ஜெட் தாக்கல் செய்ய முடியுமா என்பது குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஸ் லக்கானி விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: இடை தேர்தல் அறிவிப்புக்கு முன்பே தமிழக பட்ஜெட் தேதி அறிவிக்கப்பட்டு விட்டது. பொதுவாக தேர்தல் தேதி அறிவித்த பிறகு தேர்தல் நடத்தை விதிகள் அந்த நிமிடத்தில் இருந்து நடைமுறைக்கு வந்துவிடுகிறது. அதனால் ஆர்.கே. நகர் தொகுதிக்கு எந்த புதிய திட்டங்களையும் அறிவிக்க கூடாது
மத்திய அரசின் பட்ஜெட் தாக்கல் செய்ய இருந்த நிலையில் உத்தரப்பிரதேச தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. அப்போது பட்ஜெட் தாக்கலை தள்ளி வைக்க எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன. ஆனால் மத்திய அரசு அதை நிராகரித்தது. தற்போது தமிழகத்திற்கும் இதுபோன்ற சூழல் ஏற்பட்டுள்ளது. அதனால், பட்ஜெட்டை தள்ளிவைப்பது என்பது பெரிய பிரச்சினை இல்லை. இருந்தாலும், இது குறித்த சந்தேகங்களை தமிழக அரசு தேர்தல் ஆணையத்திடம் விளக்கம் கேட்டு பெற்று கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.