ரஜினி பெயர், படத்தைப் போடாமல் கட்சி தொடங்கும் ரஜினி ரசிகர்கள்!
இந்தக் கட்சிக்கு கொடி மற்றும் பெயரையும் தேர்வு செய்துள்ளனர்.
திருப்பூரை மையமாகக் கொண்டு இயங்கும் தமிழ்நாடு ரஜினிகாந்த் பொதுத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் எஸ்எஸ் முருகேஷ் என்பவர்தான் இந்தப் பணிகளை ஒருங்கிணைத்து செயல்படுத்தி வருகிறார்.
ரஜினி அரசியலுக்கு வரவேண்டும், தமிழக முதல்வராக வேண்டும் என்பது அவரது ரசிகர்களின் 25 ஆண்டு கால கோரிக்கை. சில முறை ரசிகர்களே ரஜினிக்காக கட்சி ஆரம்பித்ததும், அவர்களை ரஜினி விலக்கி வைத்ததும் நடந்திருக்கிறது.
இந்த முறை ரஜினி அரசியலுக்கு வந்தே தீர வேண்டும் என்ற கோரிக்கை ரசிகர்களிடம் தீவிரமடைந்துள்ளது.
இதற்கு முதல் படியாகத்தான் திருப்பூர் மற்றும் 14 மாவட்டங்களைச் சேர்ந்த ரஜினி ரசிகர்கள் ஒன்றிணைந்து இந்தக் கட்சி மற்றும் கொடியை முடிவு செய்துள்ளனர்.
இவர்கள் அனைவரும் ஒன்று கூடி, அரசியல் கட்சி அறிவிப்பை, டிசம்பர் 12-ம் தேதி திருப்பூரில் வெளியிட உள்ளனர். இதுகுறித்த தங்களின் விளக்கக் கடிதத்தை ரஜினிக்கும் தலைமை மன்றத்துக்கும் அனுப்பிவிட்டார்களாம்.
திருப்பூர், கன்னியாகுமரி, விருதுநகர், திண்டுக்கல், மதுரை, புதுக்கோட்டை, திருச்சி, கரூர், ஈரோடு, கோவை, திருப்பூர், நீலகிரி உள்ளிட்ட 14 மாவட்ட ரஜினி மன்ற நிர்வாகிகள் இதில் பங்கெடுத்துள்ளதாக எஸ்எஸ் முருகேஷ் கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், "ரஜினிகாந்த் பிறந்த நாளான டிசம்பர் 12-ம் தேதி பொதுத் தொழிலாளர் சங்கத்தை, கட்சியாக அறிவிக்க உள்ளோம்; இதற்கான பணிகள் நடந்து வருகின்றன. ரஜினிகாந்தின் மனம் புண்படும் வகையில் நடந்து கொள்ளமாட்டோம். கட்சி ஆரம்பிப்பது குறித்து, தேர்தல் ஆணையத்துக்கு முறைப்படியான அனைத்து சான்றுகளும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. ரஜினியின் படத்தையும், பெயரையும் பயன்படுத்தமாட்டோம்," என்றார்.