எதற்கும் ஏமாறாத தமிழ் மக்கள்.. ஒரு விஷயத்தில் மட்டும் தொடர்ந்து ஏமாறுகிறார்களே.. ரஜினி வேதனை
தமிழர்கள் ஏமாறுவது அரசியலில்தான் என்று ரஜினி மறைமுகமாக குறிப்பிட்டதாகவே அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள். அரசியல் குறித்து ரஜினிகாந்த் வெளிப்படையாக விமர்சனங்களை முன்வைக்க இது முதல்படியாக அமைந்துள்ளதா
சென்னை: உலக நாயகன் நடிகர் கமல்ஹாசன் பாணியில், அவரது நண்பரான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தும், அரசியல் பிரச்சினைகள் குறித்து இடித்துரைக்க ஆரம்பித்துள்ளதாக கருதுகிறார்கள் ரசிகர்கள்.
நடிகர் கமல்ஹாசன் சமீபகாலமாக அரசியல் ரீதியாக கருத்துக்களை அதிகம் கூறிவருகிறார். ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, வெள்ள பாதிப்பு குறித்து அவர் கூறிய கருத்து, ஆளும் கட்சியினரை கடுமையாக சீண்டியது.
அப்போதைய நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், கமலுக்கு எதிராக காரசாரமாக, குழப்பவாதி என்றெல்லாம் திட்டி பல பக்க அறிக்கையை வெளியிட்டார்.
கமல் கருத்துக்கள்
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, கமல்ஹாசன் தனது கருத்துக்களில் இன்னும் வேகம் காட்டிவருகிறார். ஜல்லிக்கட்டு போராட்டங்களின்போது அவரது கருத்து மிகவும் ஆவேசமாக இருந்தது. பெரும்பாலான நடிகர்கள் பல்வேறு காரணங்களால், அரசியல் கருத்துக்களை இப்படி வெளிப்படையாக சொல்லாமல் இருந்து வந்தனர். இந்த நிலையில், கமல் போன்றோர் கருத்து திரையுலகத்திலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
ரஜினி பேச்சு
இப்போது ரஜினியும் இந்த வரிசையில் சேர்ந்துள்ளார். ரசிகர்களை சந்தித்து இன்று புகைப்படம் எடுத்துக்கொண்டார் ரஜினி. அப்போது, அவர் பேசுகையில், படம் ரிலீஸ் ஆகும்போது மட்டும் ஸ்டன்ட் செய்வார். ஏதாவது சொல்வாரு. படம் ஓடுவதற்கு ஏதாவது யுக்திகளை செய்வாரு என்று என்னை பற்றி சிலர் பேசுகிறார்கள், எழுதுகிறார்கள்.
ஏமாறுகிறார்களே
உங்கள் ஆசிர்வாதத்தால (சிரித்தபடி), உங்கள் அன்பால நான் அப்படி பண்ண வேண்டிய அவசியம் இல்லை. ஏன்னா, என்னுடைய ரசிகர்கள் மற்றும் தமிழ் ரசிகர்கள் இதற்கெல்லாம் ஏமாறமாட்டார்கள். அது என்னவோ தெரியாது, ஏமாறுவதில் ஒன்னுதான், ரொம்ப ஏமாறுறாங்க. அதை நான் இப்போ சொல்ல விரும்பல (குரலை தாழ்த்திக்கொண்டு). அரிசி வெந்தால்தான் சோறு ஆகும். படம் நல்லா இருந்தால்தான் வெற்றி பெறும். நீங்கள் என்னதான் தலைகீழாக குட்டிகரணம் அடித்தால் கூட ஒன்றுமே செய்ய முடியாது. இவ்வாறு ரஜினி தெரிவித்தார்.
அரசியல் கருத்து
தமிழர்கள் ஏமாறுவது அரசியலில்தான் என்று ரஜினி மறைமுகமாக குறிப்பிட்டதாகவே அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள். அரசியல் குறித்து ரஜினிகாந்த் வெளிப்படையாக விமர்சனங்களை முன்வைக்க இது முதல்படியாக அமைந்துள்ளதாக அவர்கள் கருதுகிறார்கள். இதுவரை கருணாநிதி மற்றும் ஜெயலலிதா ஆகியோர் தலைமையில் மாறி மாறி ஆட்சிகள் அமைந்தன. அப்படிப்பார்த்தால், அவர்கள் இருவரிடமும் மக்கள் ஏமாந்துவந்ததாகவே ரஜினி கூறியதாகத்தான் பார்க்க வேண்டியுள்ளது.
திமுக, அதிமுகவுக்கு விமர்சனம்?
21 வருடங்கள் முன்பாக ஒரு கூட்டணிக்கு ஆதரவளித்தது அரசியல் விபத்து என்று ரஜினி தனது பேச்சின்போது கூறினார். அப்போது அவர் திமுக கூட்டணிக்கு ஆதரவை தெரிவித்திருந்த நிலையில், ரஜினி இவ்வாறு கூறியுள்ளது, அவர் திமுக மற்றும் அதிமுகவுக்கு மாற்றாக பாஜகவை முன்னிருத்த முயல்வதாகவே தெரிகிறது என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.