ரஜினிகாந்த் மருமகனுக்கு பெரிய பொறுப்பு.. அப்படியே தூக்கி கொடுக்கும் அண்ணாமலை! விசாகன் வருவாரா?
சென்னை: தமிழக அரசியலில் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து பரபரப்பை ஏற்படுத்தி வரும் பெயர் அண்ணாமலை. பாஜகவில் இருந்து விலகி தனது புதிய மக்கள் இயக்கமான 'வி தி லீடர்ஸ்' அமைப்பை தொடங்கியுள்ள அவர், அடுத்த கட்ட அரசியல் நகர்வுகளுக்காக தீவிரமாக களமிறங்கியுள்ளார். இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்தின் மருமகனும், தொழிலதிபருமான விசாகன் வணங்காமுடி அண்ணாமலையின் இயக்கத்தில் இணைய உள்ளதாகவும், அவருக்கு அந்த இயக்கத்தின் பொதுச் செயலாளர் பொறுப்பு
தமிழகத்தில் நீண்ட காலமாக திமுக - அதிமுக என்ற இரு கட்சிகளே முக்கிய அரசியல் சக்திகளாக இருந்து வந்தன. ஆனால் சமீபத்தில் நடந்த 2026 சட்டமன்ற தேர்தல் முற்றிலும் அந்த நிலையை மாற்றி அமைத்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.
தவெஜ வெற்றியும், முதல்வராக விஜய் பொறுப்பேற்றதும், மாற்று அரசியலுக்கான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. இதே நேரத்தில் பாஜகவில் முக்கிய முகமாக இருந்த அண்ணாமலை, கட்சியில் இருந்து விலகி தனி அரசியல் பயணத்தை தொடங்கியிருப்பது அரசியல் களத்தை மேலும் சூடுபிடிக்க வைத்துள்ளது.

அண்ணாமலை
'வி தி லீடர்ஸ்' என்ற பெயரில் தொடங்கப்பட்டுள்ள புதிய இயக்கத்திற்கு தொடக்கத்திலேயே கணிசமான வரவேற்பு கிடைத்தது. இணையதளம் மற்றும் செயலி வாயிலாக சுமார் 17 லட்சம் பேர் உறுப்பினர்களாக இணைந்ததாகவும் தகவல்கள் வெளியாகின. இதனால் இந்த இயக்கத்தில் பிரபலங்கள் யார் யார் இணையப்போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரங்களில் அதிகரித்துள்ளது.
ரஜினிகாந்த் மருமகன்
இந்த சூழலில், நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் சௌந்தர்யாவின் கணவரும், பிரபல தொழிலதிபருமான விசாகன் வணங்காமுடி அண்ணாமலையின் இயக்கத்தில் இணைவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. தொழில் துறையில் தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கியுள்ள விசாகன், மருந்து உற்பத்தி நிறுவன நிர்வாகத்தில் முக்கிய பொறுப்பில் இருந்து வருகிறார். தொழில் உலகில் நல்ல அனுபவமும், நிர்வாக திறமையும் கொண்டவராக அவர் பார்க்கப்படுகிறார்.
விசாகன் வணங்காமுடி
இதனால், அவர் அரசியல் களத்தில் அடியெடுத்து வைத்தால் அது அண்ணாமலையின் இயக்கத்திற்கு கூடுதல் பலமாக அமையும் என்ற கருத்தும் முன்வைக்கப்படுகிறது. குறிப்பாக தொழில்முனைவோர், இளைஞர்கள் மற்றும் நகர்ப்புற நடுத்தர வர்க்கத்தினரிடம் செல்வாக்கு பெற அண்ணாமலை முயற்சித்து வரும் நிலையில், விசாகன் போன்ற நபர்களின் வருகை முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
பொதுச்செயலாளர் பதவி
அதேநேரத்தில், விசாகன் வெறும் உறுப்பினராக மட்டும் இணைய மாட்டார் என்றும், அவருக்கு இயக்கத்தில் முக்கிய பொறுப்பு வழங்கப்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக பொதுச்செயலாளர் போன்ற முக்கிய பொறுப்புகளில் அவரை நியமிக்கும் வாய்ப்பு இருப்பதாக சில அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. இருப்பினும் இதுகுறித்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. முக்கியமாக, விசாகன் வணங்காமுடி தரப்பிலிருந்தோ, அண்ணாமலை தரப்பிலிருந்தோ இந்த தகவலை உறுதிப்படுத்தும் வகையில் எந்த அறிக்கையும் வெளியிடப்படவில்லை.
அரசியல் கட்சி
எனவே தற்போது பரவி வரும் தகவல்கள் அனைத்தும் அண்ணாமலை ஆதரவு வட்டாரங்களில் பேசப்படும் தகவல்களாக மட்டுமே உள்ளன. அண்ணாமலை தனது புதிய இயக்கத்தை அரசியல் கட்சியாக மாற்றும் முயற்சியில் இருப்பதாகவும், பல்வேறு துறைகளைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்களை இணைக்கும் பணியில் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படும் நிலையில், எதிர்காலத்தில் மேலும் பல அதிரடி அறிவிப்புகள் வெளியாகலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. அந்த பட்டியலில் விசாகன் வணங்காமுடியின் பெயரும் இடம்பெற்றுள்ளதால், இந்த விவகாரம் தற்போது தமிழக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு
எனினும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் வரை, ரஜினிகாந்தின் மருமகன் அண்ணாமலையின் இயக்கத்தில் இணைய உள்ளாரா?, அவருக்கு பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட உள்ளதா? போன்ற தகவல்களை உறுதிப்படுத்தப்பட்ட செய்தியாக கருத முடியாது என்கின்றனர் அண்ணாமலையில் ஆதரவாளர்கள்.












Click it and Unblock the Notifications