7 பேர் விடுதலை: அம்பேத்கர் சிலை முன்பு சுயமரியாதை திருமணம் செய்து கொண்டாடிய காதல் ஜோடி
சேலம்: ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என தமிழக அரசு அறிவித்ததை கொண்டாடும் விதமாக சேலம் அம்பேத்கார் சிலை முன்பு காதல் ஜோடி ஒன்று சுயமரியாதை திருமணம் செய்து கொண்டது.
நேற்று முன்தினம் மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு வேலூர் சிறையில் இருக்கும் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரது மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.மேலும், அவர்களது விடுதலை குறித்து மாநில அரசு முடிவு செய்யலாம் என தெரிவித்தது.
அதனைத் தொடர்ந்து, ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் இருக்கும் ஏழு பேரையும் விடுதலை செய்வதாக தமிழக அரசு அறிவித்தது. இது தமிழ் உணர்வாளர்கள் மற்றும் பல்வேறு அமைப்பினருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
அவர்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் இனிப்புகள் வழங்கியும், பட்டாசுகள் வெடித்தும் கொண்டாடினார்கள். இந்நிலையில் நேற்று சேலம் அம்பேத்கார் சிலை முன்பு 7 பேர் விடுதலை செய்யும் அறிவிப்பு வெளியிட்டதை தொடர்ந்து ம.தி.மு.க. மாநகர பொறுப்பாளர் ஆனந்தராஜ், மக்கள் தமிழ்தேச பொதுவுடமை கட்சியை சேர்ந்த பிந்துசாரன், புரட்சிக்கர பெண்கள் விடுதலை இயக்கத்தை சேர்ந்த தமயந்தி உள்பட பலர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கினார்கள்.
அதனைத் தொடர்ந்து, அங்கு வந்த நாகை மாவட்டம் பரசலூரை சேர்ந்த காதல்ஜோடியான செந்தில்குமார்(வயது28), கவிதா(25) ஆகியோர், அங்கிருந்த நிர்வாகிகளிடம்,‘‘நாங்கள் இருவரும் பல ஆண்டுகளாக காதலித்து வந்தோம். தற்போது திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளோம். மரண தண்டனையில் இருந்து சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோர் விடுதலை செய்யப்படும் இந்த நாளில் எங்கள் திருமணம் நடக்க ஆசைப்படுகிறோம். அதுவும் சுயமரியாதை திருமணமாக இருக்க வேண்டும்‘‘ என தங்கள் விருப்பத்தை தெரிவித்துள்ளனர்.
அதைத்தொடர்ந்து செந்தில்குமார்-கவிதா ஜோடியின் சுயமரியாதை திருமணம் சேலம் அம்பேத்கார் சிலை முன்பு பல்வேறு அமைப்பினர் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. மண வாழ்க்கையில் இணைந்த அவர்கள் இருவரையும் அங்கிருந்த நிர்வாகிகள் மலர்தூவி வாழ்த்தினார்கள். அதைத்தொடர்ந்து காதல் ஜோடிக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.












Click it and Unblock the Notifications