நளினியின் தந்தை மரணம்: இறுதிச் சடங்கில் பங்கேற்க பரோலில் வருகிறார்
சென்னை: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு 25 ஆண்டுகளாக சிறையில் இருந்து வரும் நளினியின் தந்தை சங்கரநாரயணன் இன்று உடல் நலக் குறைவால் காலமானார். அவரது இறுதிச்சடங்கில் கலந்துகொள்ள பரோலில் செல்ல நளினிக்கு வேலூர் சிறை நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தடா நீதி மன்றத்தால் தூக்கு தண்டனை பெற்றவர் நளினி. காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தியின் பரிந்துரையால் தூக்கு தண்டனை, ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது.
தற்போது வேலூர் பெண்கள் தனிச்சிறையில் நளினி அடைக்கப்பட்டுள்ளார். இவரது கணவர் ஸ்ரீகரன் என்ற முருகன் ஆயுள் தண்டனைக் கைதியாக வேலூர் ஆண்கள் மத்திய சிறையில் உள்ளார். ஆயுள் கைதியான நளினியை விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து நடை பெற்றுவருகிறது.
இந்நிலையில், நளினியின் தந்தையும் ஓய்வு பெற்ற போலீஸ் இன்ஸ்பெக்டருமான சங்கரநாராயணன் இன்று நெல்லை மாவட்டம் வி.கே.புரத்தில் உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 91. அவரது உடல் நெல்லையில் இருந்து சென்னை கோட்டூரில் உள்ள நளினியின் சகோதரர் இல்லத்துக்கு கொண்டுவரப்படுகிறது. அங்கு இறுதிச்சடங்கு நடைபெற உள்ளது.
தந்தையின் மரணத்தைத் தொடர்ந்து சிறை அதிகாரிகளுக்கு நளினி. முறைப்படி தகவல் தெரிவித்துள்ளார். மேலும் நளினியை பரோலில் விடுவிக்குமாறு அவரது தாய் பத்மாவதி வேலூர் சிறை அதிகாரிக்கு கடிதம் எழுதியுள்ளார். இதையடுத்து தந்தையின் இறுதிச் சடங்கில் பங்கேற்க நளினிக்கு சிறை நிர்வாகம் பரோலில் செல்ல அனுமதி வழங்கியுள்ளது. நாளை காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை பரோலில் செல்ல சிறை நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.