சென்னையில் ராஜீவ் காந்தி சிலைகள் சேதம்: காங்கிரஸார் ஆர்ப்பாட்டம்
சென்னை: சென்னையில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் சிலைகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன.
கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் தமிழகத்தில் ராஜீவ் காந்தியின் சிலையை விஷமிகள் சேதப்படுத்தினர். சிலையில் உள்ள தலையை மட்டும் துண்டாக எடுத்தனர். இந்நிலையில் ராஜீவ் காந்தியின் சிலைகள் மீண்டும் சேதப்படுத்தப்பட்டுள்ளன.
சென்னையில் உள்ள பட்டாளம், வேப்பேரியில் ராஜீவ் காந்தியின் சிலைகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. இதை பார்த்த காங்கிரஸார் பட்டாளம் பகுதியில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
சிலையை உடைத்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மாநிலத்தின் பிற பகுதிகளில் உள்ள ராஜீவ் சிலைகளுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷமிட்டனர்.
ராஜீவ் சிலைகளுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படும் என்று போலீசார் வாக்குறுதி அளித்தனர். இதையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.