7 தமிழர்களை விடுவிக்க கோரி சென்னையில் எழுச்சியுடன் நடந்த பேரணி: பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்பு
சென்னை: பேரறிவாளன், முருகன், சாந்தன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய வலியுறுத்தி சென்னையில் பல்லாயிரக்கானோர் பங்கேற்ற எழுச்சி மிகு பேரணி நடைபெற்றது. தனது கோரிக்கையை ஏற்று இந்த பேரணியில் பங்கேற்ற அனைவருக்கும் பேரறிவாளனின் தாயார் அற்புதம் அம்மாள் கண்ணீர் மல்க நன்றி கூறினார்.
ராஜீவ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரும் 25 ஆண்டுகளாக சிறையில் வாடுகின்றனர். இவர்களின் விடுதலைக்காக வேலூரில் இருந்து சென்னை புனித ஜார்ஜ் கோட்டையை நோக்கி வாகனப் பேரணியை நடத்த இருந்தார் பேரறிவாளனின் தாய் அற்புதம் அம்மாள்
இந்தப் பேரணிக்கு மனித உரிமை ஆர்வலர்கள், அரசியல் பிரமுகர்கள், திரையுலகினர் எனப் பலரும் பேரணிக்கு ஆதரவு தெரிவித்திருந்தனர். முதல்வர் ஜெயலலிதாவும் பேரணிக்கு அனுமதி கொடுத்திருந்தார். இந்நிலையில் 7 பேரின் விடுதலைக்காக வேலூரில் இருந்து சென்னை கோட்டை நோக்கி நடைபெறவிருந்த வாகனப் பேரணிக்கு வேலூர் மாவட்ட காவல்துறையினர் அனுமதி தர மறுத்துவிட்டனர்.
மேலும் தேசிய நெடுஞ்சாலையில் பேரணி நடைபெற உள்ளதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் எனவே பேரணிக்கு அனுமதி அளிக்க முடியாது எனவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தடையை மீறி போராட்டம் நடத்தினால் கைது செய்யப்படுவார்கள் என காவல்துறை எச்சரிக்கை விடுத்தது. இந்நிலையில், வேலூர் சிறைக்குப் பதில் சென்னை எழும்பூரிலிருந்து பேரணி கிளம்பும் என பேரறிவாளனின் தாயார் தெரிவித்தார்.
எழுச்சியுடன் நடந்த பேரணி
இதனையடுத்து இன்று பிற்பகல் 1 மணிக்கு எழும்பூர் ராஜ ரத்தினம் மைதானத்தில் இருந்து பேரணி தொடங்கியது. திரைப்பட இயக்குநர்கள் ஜனநாதன், விக்ரமன், கௌதமன், வெற்றி மாறன், நாம் தமிழர் இயக்கத் தலைவர் சீமான், பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ், நடிகர் சத்யராஜ், ராஜேஸ் கண்ணா, கொளத்தூர் மணி, ராமகிருஷ்ணன், தி. வேல்முருகன், திருமுருகன் காந்தி உள்ளிட்டோருடன் பல்லாயிரக்கணக்கான தமிழ் உணர்வாளர்கள் பங்கேற்றனர்.
எழுச்சியுடனும், உணர்ச்சி பெருக்குடனும் நடைபெற்ற இந்த பேரணியின் போது 7 பேர் விடுதலையை வலியுறுத்தி பலரும் முழக்கமிட்டனர். சிறுவர்களும் கூட ஏழு பேர் விடுதலையை வலியுறுத்தும் பதாகையை ஏந்தி பங்கேற்றனர்.
எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் தொடங்கிய இந்த பேரணி நான்கு கிலோமீட்டர் தூரம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து அற்புதம் அம்மாளுடன் மணிமேகலை, வழக்கறிஞர் சிவக்குமார், இயக்குநர் விக்ரமன் ஆகியோர் தலைமைச் செயலகம் சென்று 7 பேரை விடுதலை செய்யக் கோரி மனு அளித்தனர்.
கட்சி பேதமின்றி பேரணியில் பங்கேற்ற அனைவருக்கும் பேரறிவாளனின் தாயார் அற்புதம் அம்மாள் கண்ணீர் மல்க நன்றி கூறினார்.