பாமக பிரச்சாரத்துக்கு தேர்தல் அதிகாரிகள் அனுமதி மறுப்பு: ராமதாஸ் கண்டனம்
வேலூர்: பாமக பிரசாரத்துக்கு தேர்தல் அதிகாரிகள் அனுமதி மறுத்திருப்பதற்கு அக்கட்சி தலைவர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் மே 16 ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி அறவிக்கப்பட்ட நாளில் இருந்து நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன. அதையடுத்து தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனை மற்றும் விதிமீறல்கள் குறித்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் பாமக சார்பில் வேலூர் மாவட்டம் அரக்கோணம் தொகுதி சித்தேரியில் நேற்று நடைபெறவிருந்த பிரச்சாரத்துக்கும், விழுப்புரம் மாவட்டம் மயிலம் தொகுதி வெங்கந்தூரில் வியாழக்கிழமை நடைபெறவிருந்த பிரச்சாரத்துக்கும் தேர்தல் அதிகாரிகள் அனுமதி மறுத்துள்ளனர்.
ஒவ்வொரு தொகுதியிலும் அதிகபட்சமாக 5 கிராமங்களில் மட்டுமே பிரச்சாரம் செய்ய அனுமதி அளிக்கப்படும் என்று கூறியுள்ளனர். இது, ஜனநாயகத்துக்கும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி வழங்கப்பட்டுள்ள உரிமைகளுக்கும் எதிரானது.
மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் போக்குவரத்துக்கும், மக்கள் நடமாட்டத்துக்கும் பாதிப்பு ஏற்படக் கூடாது என்பதற்காக குறிப்பிட்ட சில இடங்களில் மட்டும் கூட்டம் நடத்த அனுமதிக்கப்படுகிறது. ஆனால் கிராமப்புறங்களில் தேவையில்லாமல் இத்தகைய கட்டுப்பாடுகள் ஏன் விதிக்கப்பட்டுகின்றன. இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் தலையிட்டு இந்தக் கட்டுப்பாட்டை நீக்க வேண்டும். அனைத்து கிராமங்களிலும் பிரச்சாரம் நடத்துவதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.