கூட்டணிக்காக இரட்டை வேடம் போடும் ராமதாஸ்… வேல்முருகன் தாக்கு
தர்மபுரி: விஜயகாந்தை குடிகாரன், தொப்புளில் பம்பரம் விட்டவர் என்று பேசிய ராமதாஸ், இப்போது அவரோடு கூட்டு வைத்து இரட்டை வேடம் போடுகிறார் என்று தமிழக வாழ்வுரிமைக்கட்சித் தலைவர் வேல்முருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.
தருமபுரியில் அ.தி.மு.க வேட்பாளர் பி.எஸ்.மோகனை ஆதரித்து நேற்று வேல்முருகன் பிரசாரம் செய்தார். அப்போது அவர், முதல்வர் ஜெயலலிதாவை, வார்த்தைக்கு வார்த்தை அம்மா,... அம்மா... என்று அழைத்து அதிமுகவினரை விட ஆச்சரியப்படுத்தினார்.
பிரசாரத்தில் பேசிய வேல்முருகன் கூறியதாவது:

கொள்கையில்லாத கூட்டணி
"நீங்கள் இதுவரை வன்னியர்கள் ஓட்டு அன்னியர்களுக்கு இல்லை, எந்த தேசிய கட்சிகளோடும் திராவிட கட்சிகளோடும் கூட்டணியில்லை என்று சொல்லி வந்த ராமதாசும், அன்புமணியும், இப்போது கொள்கையில்லாத கூட்டணியில் சேர்ந்திருக்கிறார்கள்.

குடிகாரனுடன் கூட்டு
லட்சியம் இல்லாத கூட்டணியில் சேர்ந்திருக்கிறார்கள். விஜயகாந்தை குடிகாரன், தொப்புளில் பம்பரம் விட்டவர் என்று கூறிய குருவும், ராமதாசும் இப்போது அவரோடு கூட்டு வைத்திருக்கிறார்கள்.

சாதிப்பாசம் செல்லாது
வன்னியர்கள் ஓட்டு அன்னியர்களுக்கு இல்லை என்று சொல்லிவந்த ராமதாசை பார்த்து கேட்கிறேன். இப்போது உங்கள் ஓட்டை யாருக்கு போடபோகிறீர்கள். நீங்கள் பதவிக்கு வருவதற்கு வன்னியர்களை பயன்படுத்தி கொள்கிறீங்கள் இனிமேல் உங்கள் சாதிப்பாசம் செல்லாது. உங்கள் இரட்டை வேடம் கலைந்துவிட்டது.

அம்மாவை ஆதரிக்கிறேன்
பல லட்சம் தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்சவை ஐ.நா மன்றத்தில் நிறுத்தி தண்டனை வாங்கி கொடுக்க அம்மாவை ஆதரிக்கிறேன். காவிரி பிரச்னைக்கு தீர்வுகாண, கங்கையை இணைப்பதற்கு அம்மாவை ஆதரிக்கிறேன்.

நீங்களும் ஆதரிங்க
இத்தனை காலம் இந்த நாட்டை அடகு வைத்த தி.மு.க, காங்கிரஸ் கட்சிகளை தூக்கியெறிய வேண்டும். அதையெல்லாம் அம்மா தனி ஆளாக செய்து முடிப்பார். அதற்கான தகுதி அவருக்கு மட்டுமே இருக்கிறது. அதனால் நீங்கள் அம்மாவை ஆதரிக்க வேண்டும்" என்று கேட்டுக்கொண்டார்.












Click it and Unblock the Notifications