சீரழிப்பதில் சிறந்தவர் இந்த 'லேடி'.. ஜெ. மீது ராமதாஸ் காட்டமான தாக்கு!
சென்னை: தமிழகத்தை சீரழிப்பதில்தான் சிறந்தவர் இந்த லேடி என்று முதல்வர் ஜெயலலிதாவை பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கடுமையாக தாக்கியுள்ளார்.
மோடியை விட சிறந்தவர் இந்த லேடி என்று ஜெயலலிதா பேசியது குறித்து இப்படிக் கருத்து தெரிவித்துள்ளார் ராமதாஸ்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை...
நாள் நெருங்கி விட்டது
இந்தியத் திருநாட்டின் எதிர்காலத்தை தீர்மானிப்பதற்கான நாள் நெருங்கிவிட்டது. தமிழ்நாட்டில் நாடாளுமன்றத் தேர்தல் நாளை மறுநாள் நடைபெறவிருக்கிறது. கடந்த 25 ஆண்டுகளாகவே மத்தியில் ஆட்சியை அமைப்பது யார்? என்பதை தீர்மானிக்கும் சக்திகளாக தமிழக மக்கள் தான் இருந்து வருகின்றனர். இந்த முறையும் மத்திய ஆட்சியாளரை தமிழக மக்கள் தான் தீர்மானிக்க உள்ளனர்.
காங்கிரஸை வீழ்த்துவோம்
மத்தியில் கடந்த ஐந்தாண்டுகளாக ஆட்சி செய்து தமிழகத்திற்கு துரோகங்களை இழைத்த காங்கிரஸ் கட்சியை வீழ்த்துவது மட்டுமின்றி, தமிழகத்தை கடந்த 47 ஆண்டுகளாக சீரழித்து வரும் அ.தி.மு.க. மற்றும் தி.மு.க.வுக்கு பாடம் புகட்டுவதற்கும் நாளை மறுநாள் நடைபெறவிருக்கும் தேர்தல் மிகப்பெரிய வாய்ப்பு ஆகும்.
திராவிடக் கட்சிகளால் பெற்றது என்ன...
கடந்த 47 ஆண்டுகளாக தமிழகத்தில் நடைபெற்று வரும் திராவிடக் கட்சிகளின் ஆட்சிகளில் தமிழகம் பெற்றதையும், இழந்ததையும் சிந்தித்துப் பார்த்து மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று தமிழ்நாட்டு வாக்காளர்களைக் கேட்டுக் கொள்கிறேன். அதற்கு வசதியாக அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. ஆட்சிகளின் சில செயல்பாடுகளை உங்கள் பார்வைக்கு முன் வைக்கிறேன்.
சீரழித்த லேடி
சென்னையில் நேற்று பிரசாரத்தை நிறைவு செய்த அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா நிர்வாகத் திறனில் சிறந்தவர் மோடியா? அல்லது இந்த லேடியா? எனக் கேள்வி எழுப்பியிருக்கிறார். மூன்றே மாதங்களில் மின்வெட்டைப் போக்கி தமிழகத்தை ஒளிமயமான மாநிலமாக மாற்றப்போவதாகக் கூறி ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா, 3 ஆண்டுகளாக தமிழகத்தை இருண்ட மாநிலமாக்கி தொழில் வளர்ர்சியையும், பொருளாதார வளர்ச்சியையும் சீரழித்தது, சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதாகக் கூறி கடந்த 3 ஆண்டுகளில் 6,500 படுகொலைகள், 66 ஆயிரம் கொள்ளைகள், 25 ஆயிரம் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் என வாழத் தகுதியற்ற மாநிலமாக தமிழகத்தை மாற்றியது ஆகியவற்றை வைத்துப் பார்க்கும்போது சீரழிக்கும் திறனில் சிறந்தவர் இந்த லேடி தான் என்பது தெளிவாகிறது.
மின்வெட்டு மாநிலமாக்கிய திமுக சாதனை
திட்டமிட்டு செயல்பட்டால் 3 ஆண்டுகளில் மின்வெட்டை போக்கிவிட முடியும் என்ற நிலையில் முந்தைய 5 ஆண்டு ஆட்சியில் எந்த திட்டங்களையும் செயல்படுத்தாமல் தமிழகத்தை மின்வெட்டு மாநிலமாக மாற்றியது தி.மு.க.வின் சாதனை. அதையே காரணம் காட்டி ஆட்சிக்கு வந்த பின் மின்வெட்டை போக்குவதற்கு பதில் மின்வெட்டை அதிகரித்தது தான் அ.தி.மு.க. அரசின் சாதனை.
ஈழத் தமிழர் படுகொலையை கிண்டலடித்த கருணாநிதி
போர் என்றால் பொது மக்கள் கொல்லப்படுவது இயல்பு தான் என்று ஜெயலலிதா கூறியதும், மழை விட்டும் தூவானம் விடாததைப் போல் தான் தமிழர்கள் இன்னும் கொல்லப்படுகிறார்கள் என்று கூறி ஈழத் தமிழர் படுகொலையை கலைஞர் கிண்டல் செய்ததும் தான் இலங்கை பிரச்னையில் இரு கட்சிகளும் காட்டிய அக்கறை ஆகும்.
கொடநாடு ஜெ... தந்தியோடு நின்ற கருணாநிதி
மீனவர்கள் மீதான தாக்குதலை தடுக்க நடவடிக்கை எடுக்காமல் பிரதமருக்கு தந்தி அனுப்பிவிட்டு திரையுலகக் கொண்டாட்டங்களில் கலந்து கொள்வது கலைஞரின் வழக்கம் என்றால், கடிதம் எழுதுவதுடன் கடமை முடிந்ததாகக் கூறி குளு குளு கொடநாட்டில் ஓய்வெடுப்பது தான் ஜெயலலிதாவின் வழக்கம்.
இருவருமை சளைத்தவர்கள் அல்ல...
காவிரி பிரச்னையிலும், முல்லைப் பெரியாறு விவகாரத்திலும் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பைக் கூட பயன்படுத்திக் கொள்ளாமல் தமிழகத்தின் உரிமைகளை தாரை வார்த்ததில் இருவருமே ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்ல.
மக்களை மழுங்கடிக்க மது, சினிமா
தமிழக மக்களுக்கு கல்வி கொடுத்தால் சிந்தித்து செயல்படுவார்கள்; அப்படி செயல்பட்டால் நாம் ஆட்சிக்கு வர முடியாது என்பதற்காகவே மக்களை மழுங்கடிக்கும் நோக்குடன் மது, இலவசம், திரைப்படங்கள் ஆகியவற்றை திகட்டத் திகட்டக் கொடுத்து தமிழகத்தை சீரழித்த கட்சிகள் தான் அ.தி.மு.க.வும், தி.மு.க.வும்.
இலவசங்களை நம்பி
தேர்தலுக்கு முன்பு வரை மக்கள் வரிப்பணத்தில் இலவசங்கள், தேர்தல் நேரத்தில் கொள்ளையடித்த பணத்தில் வாக்குக்கு ரூ.2,000 முதல் ரூ.3,000 வரை பணம் ஆகியவற்றைக் கொடுத்து வாக்குகளை விலைக்கு வாங்கி விடலாம் என்பது தான் இந்த கட்சிகளின் நம்பிக்கை.
ரூ. 25,000 கோடி கடன்தான் சாதனை
ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை ரூ. 3 ஆயிரம் மதிப்புள்ள இலவசங்களைக் கொடுத்து விட்டு, அவற்றைக் கொள்முதல் செய்வதிலும் ஊழல் செய்து ஒவ்வொரு தனிநபரின் மீதும் ரூ.25 ஆயிரம் கடன் சுமையை சுமத்தியது தான் அ.தி.மு.க. மற்றும் தி.மு.க.வின் சாதனை ஆகும்.
அரசு, மக்களை ஏமாற்றிய ஜெயலலிதா
மாதம் ஒரு ரூபாய் மட்டுமே ஊதியம் வாங்கிய நிலையில் ஐந்தாண்டுகளில் ரூ.5,000 கோடி சொத்துக்களை குவித்தது, அரசுக்கு சொந்தமான டான்சி நிலத்தை அடிமாட்டு விலைக்கு பறித்துக் கொண்டது, நிலக்கரி, தொலைக்காட்சி வாங்கியதில் ஊழல், சட்டவிரோத கட்டிடங்களுக்கு அனுமதி தருவதில் ஊழல் என ஊழலில் திளைத்ததும், மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டிய முதலமைச்சரே வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யாமல் அரசை ஏமாற்றியதும் லேடி ஜெயலலிதாவின் சிறப்புகள் ஆகும்.
ஊழல் திமுகவின் முழு நேரத் தொழில்
வீராணம் ஊழலில் தொடங்கி, ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ஸ்பெக்ட்ரம் ஊழல் வரை முறைகேடு செய்வதை மட்டுமே முழுநேரத் தொழிலாக கொண்டது தி.மு.க.
மாறி மாறி ஏமாற்றிய திமுக, அதிமுக
இவ்வாறு தமிழகத்தில் வளத்தை ஏற்படுத்தப் போவதாக கூறி மாறி மாறி ஆட்சிக்கு வந்த இந்தக் கட்சிகள் தங்களை வளமாக்கிக் கொண்டனவே தவிர தமிழக மக்களை வளமாக்க வில்லை; அவர்கள் இன்னும் வறுமையில் தான் வாடிக்கொண்டிருக்கின்றனர்.
தீமைகளுக்கு முடிவு கட்டுவோம்
இந்த தீமைகளுக்கு முடிவு கட்டி, தமிழகத்தை இந்த கட்சிகளின் பிடியிலிருந்து மீட்டெடுப்பதற்காகத் தான் பாரதிய ஜனதா தலைமையில் பாட்டாளி மக்கள் கட்சி, தேசிய முற்போக்கு திராவிடக் கழகம், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சி, இந்திய ஜனநாயகக் கட்சி, புதிய நீதிக் கட்சி ஆகிய கட்சிகளை இணைத்து தேசிய ஜனநாயகக் கூட்டணியை உருவாக்கி இருக்கிறோம்.
மறுமலர்ச்சியை ஏற்படுத்துங்கள்
தமிழகத்தில் மட்டுமின்றி, ஒட்டுமொத்த இந்தியாவிலும் புதிய மறுமலர்ச்சியை ஏற்படுத்த வேண்டுமானால் மத்தியில் நரேந்திர மோடி தலைமையில் புதிய கூட்டணி அரசு அமைய வேண்டும். அத்தகைய அரசு அமைந்தால் தமிழகத்தின் தேவைகள் அனைத்தும் நிறைவேறும், மின்வெட்டு என்பதே இல்லை என்ற நிலை ஏற்படும், தமிழகத்தில் மது என்ற அரக்கன் ஒழிக்கப்பட்டு மக்கள், குறிப்பாக பெண்கள் மகிழ்ச்சியுடன் வாழும் நிலை உருவாகும், நதிநீர் பிரச்னைகள் அனைத்தும் தீர்க்கப்பட்டு விவசாயம் செழிக்கும், ஈழத்தமிழர்களை கொன்று குவித்தவர்கள் கூண்டிலேற்றி தண்டிக்கப் படுவார்கள், கச்சத்தீவு மீட்கப்பட்டு தமிழகம் மற்றும் புதுவை மீனவர்கள் அச்சமின்றி கடலுக்கு சென்று மீன் பிடிக்கும் நிலை ஏற்படுத்தப்படும்.
மக்களே பயன்படுத்துங்கள்
மொத்தத்தில் தமிழக மக்கள் எப்படிப்பட்ட ஆட்சி அமைய வேண்டும் என எதிர்பார்த்தார்களோ, அத்தகைய ஆட்சி மத்தியில் அமையப் போவது உறுதி. எனவே, நீண்ட காலத்திற்குப் பிறகு கிடைத்துள்ள இந்த மிகப்பெரிய வாய்ப்பை தமிழக மக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
38 தொகுதிகளிலும் எங்களுக்கே வாக்களியுங்கள்...
தமிழ்நாட்டில் நீலகிரி தவிர மீதமுள்ள 38 தொகுதிகளிலும் தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகளுக்கு தாமரை, மாம்பழம், முரசு, பம்பரம் ஆகிய சின்னங்களிலும், புதுவையில் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவு பெற்ற பா.ம.க. வேட்பாளர் ஆர்.கே.ஆர்.அனந்தராமனுக்கு மாம்பழம் சின்னத்திலும் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.