வேட்பாளர்கள் வீடுகளில் சோதனையும் பிடிபட்ட பணம், மது, பரிசு பொருட்கள்!
அரவக்குறிச்சி தொகுதியில் அதிமுக நிர்வாகி அன்புநாதன் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.4.77 கோடி பணமும், ரூ.1.30 கோடிக்கு வேட்டி&சேலைகள் வாங்கப்பட்டதற்கான குறிப்புகளும் பறிமுதல் செய்யப்பட்டன. திமுக வேட்பாளர் கே.சி.பழனிச்சாமி மற்றும் அவரது மகன் சிவராமனின் வீடுகளில் நடத்தப்பட்ட சோதனைகளில் ரூ.1.98கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது. அத்துடன் இந்த தொகுதியில் மட்டும் வாக்காளர்களுக்கு வழங்கப்படவிருந்த 1525 லிட்டர் மதுவும் சிக்கியது.
தஞ்சாவூரில் உள்ள முத்து லாட்ஜில் அதிமுக வேட்பாளர் ரங்கசாமி சார்பில் வாக்காளர்களுக்கு வழங்கப்படுவதற்காக வைக்கப்பட்டிருந்த ரூ.15 லட்சம் உட்பட மொத்தம் 25.48 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. 13 வட்டங்களில் உள்ள வாக்காளர்களுக்கு தலா ரூ.500 வீதம் ரூ.1.40 கோடி பணம் கொடுக்கப்பட்டதற்கான ஆதாரங்கள் பிடிபட்டுள்ளன. அந்தவகையில் மொத்தமுள்ள 51 வட்டங்களிலும் ரூ.6 கோடி வழங்கப்பட்டிருக்கலாம் என்ற முடிவுக்கு வர வேண்டியிருக்கிறது.
அரவக்குறிச்சி தொகுதியில் முதல்கட்டமாக தேர்தல் ஒத்திவைக்கப்பட்ட பிறகும் வாக்காளர்களுக்கு பணம் தரப்பட்டது. மே 17ஆம் தேதி இரவு நடத்தப்பட்ட சோதனையில் ரூ.5.72 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. அரவக்குறிச்சியில் ஓர் ஓட்டுக்கு ரூ.5000 வரை வழங்கப்பட்டிருக்கலாம் என்று தெரியவந்துள்ளது. ஓட்டுக்கு பணம் வேண்டாம் என்று தமது பெற்றோர் கூறியபிறகும் கட்டாயப்படுத்தி பணம் தந்ததாக அமெரிக்காவிலிருந்து ஒரு பொறியாளர் புகார் செய்துள்ளார்.
இரு தொகுதிகளிலும் நியாயமான, சுதந்திரமான தேர்தலை நடத்துவதற்கான சூழலை, ஓட்டுக்கு பணம் தரப்பட்டது தான் சீரழித்தது. குறிப்பாக அரவக்குறிச்சி தொகுதியில் அதிமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி, திமுக வேட்பாளர் கே.சி.பழனிச்சாமி ஆகிய இருவருமே பணபலம் மிக்கவராக இருப்பதால் அத்தொகுதியில் ஆணையத்தின் கண்காணிப்பையும் மீறி பணம் விளையாடியது.
மேற்கூறிய குற்றச்சாற்றுகள் அனைத்தையும் கடந்த 27.05.2016 அன்று வெளியிட்ட அறிவிக்கையில் தேர்தல் ஆணையமே கூறியிருக்கிறது. அதுமட்டுமின்றி, இந்த இரு தொகுதிகளிலும் தற்காலிகமாக தேர்தலை ஒத்திவைப்பதால், களச்சூழலில் எந்த மாற்றமும் ஏற்படப்போவதில்லை என்றும், காலப்போக்கில் தேர்தல் நடத்துவதற்கான சூழல் ஏற்பட்ட பிறகு தேர்தல் நடத்தப்படும் என்றும் ஆணையம் கூறியிருந்தது. இத்தகைய நிலையில், இப்போது இரு தொகுதிகளிலும் தேர்தலை நடத்துவதற்கான சூழல் நிலவுகிறது என்ற முடிவுக்கு ஆணையம் எந்த அடிப்படையில் வந்தது? என்பது தான் மில்லியன் டாலர் வினாவாகும்.