சட்டசபை தேர்தலில் ரூ16,000 கோடியை வாரி இறைத்த அதிமுக, திமுக!
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் ஆளும் அதிமுக ரூ.10,000 கோடியும், திமுக ரூ.6000 கோடியும் வாரி இறைத்து தான் வெற்றி பெற்றன. தஞ்சாவூர், அரவக்குறிச்சி ஆகிய தொகுதிகளிலும் அவை பணத்தை வெள்ளமாக பாயவிட்டன. இப்போதும் தஞ்சாவூர், அரவக்குறிச்சி தொகுதிகள் மட்டுமின்றி, இடைத்தேர்தல் நடைபெறும் திருப்பரங்குன்றத்திலும் பணத்தை முதலீடு செய்து வாக்குகளை அறுவடை செய்ய அக்கட்சிகள் தயாராக உள்ளன.
3 தொகுதி தேர்தல் நியாயமாக நடத்த ஒத்துழைப்போம்; ஓட்டுக்கு பணம் தரமாட்டோம் என்று தேர்தல் ஆணையத்திடமோ அல்லது இதுதொடர்பான வழக்கு நடைபெற்று வரும் சென்னை உயர்நீதிமன்றத்திலோ இரு கட்சிகளும் வாக்குறுதி அளிக்கவில்லை. இத்தகைய சூழலில் இந்த தேர்தல் நியாயமாகவும், சுதந்திரமாகவும் நடக்கும் என நம்புவது மூடத்தனமே! வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக அரவக்குறிச்சி தொகுதியில் 58 வழக்குகளும், தஞ்சாவூரில் பத்துக்கும் மேற்பட்ட வழக்குகளும் பதிவு செய்யப்பட்டன. இதில் சம்பந்தப்பட்டவர்கள் எவரும் இதுவரை தண்டிக்கப்படவில்லை. அரவக்குறிச்சி அன்புநாதன் வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட பணம் தொடர்பாக அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இவற்றுக்கெல்லாம் முடிவு ஏற்படாத நிலையில், இரு தொகுதிகளுக்கும் தேர்தல் தேதியை ஆணையம் அறிவித்திருப்பது இன்னொரு ஜனநாயக படுகொலை நடப்பதற்கும், மேலும் ஒரு முறை பணநாயகம் வெற்றி பெறவும் தான் வழிவகுக்கும் என்பது உறுதி.
ஒருவேளை இந்த தேர்தல்களை நியாயமாக நடத்த வேண்டும் என்பது தான் தேர்தல் ஆணையத்தின் உண்மையான நோக்கமாக இருக்குமானால், அதை உறுதி செய்வதற்காக...
- தஞ்சாவூர், அரவக்குறிச்சி தொகுதிகளில் ஓட்டுக்கு பணம் கொடுத்த அ.தி.மு.க., தி.மு.க. வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்.
- இரு தொகுதிகளிலும் 10 வாக்குச்சாவடிக்கு ஒரு தேர்தல் பார்வையாளரையும், ஒரு கம்பெனி மத்திய துணை இராணுவப் படையையும் 26-ஆம் தேதி முதல் பணியில் ஈடுபடுத்த வேண்டும்.
- தஞ்சாவூர், கரூர் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர்களை தேர்தல் அணியிலிருந்து விலக்கி வைக்க வேண்டும். அனைத்து வாக்குச்சாவடிகளிலும் தலைமை தேர்தல் அதிகாரியாக வெளிமாநிலத்தவரை நியமிக்க வேண்டும்.
- வாக்காளர்களுக்கு ஓட்டுக்கு பணம் கொடுத்தது கண்டுபிடிக்கப்பட்டால் உடனடியாக தேர்தல் ஒத்திவைக்கப்படும் அல்லது ரத்து செய்யப்படும் என்று தேர்தல் ஆணையம் எச்சரிக்க வேண்டும்.
இவை சட்டப்படியோ, நடைமுறைப்படியோ சாத்தியமில்லை என்று தேர்தல் ஆணையம் கூறினால், இவற்றை சாத்தியமாக்குவதற்கான தேர்தல் சீர்த்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும். அதுவரை தஞ்சாவூர், அரவக்குறிச்சி உள்ளிட்ட 3 தொகுதி தேர்தல்களை காலவரையின்றி ஒத்திவைக்க வேண்டும்.
இவ்வாறு ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.